ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Wednesday, November 17, 2010

ஸ்பெக்ட்ரம் உண்மைகள் ஓர் அலசல்!! நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 03

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது. 

பிரதமர், ஆளும் கட்சி மற்றும் மத்திய அரசாங்கம்:

ஒரு சில பத்திரிக்கைகள் சொல்லுவது உண்மையானால்:

இந்தியாவை ஆளும் மந்திரிசபையில் ஒரு முக்கியமான துறையின் ஒரு முக்கியமான மந்திரி இந்தியாவின் முக்கியமான வளங்களில் ஒன்றை தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தன் கட்சித் தலைவரின் குடும்பத்தாருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுகிறார். எதுவுமே நடவாதது மாதிரி நான் எல்லாமே பிரதமருக்குத் தெரிவித்தே நடந்து கொண்டேன் என்றும், தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்றும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும், பிரதமருக்குத் தெரியாமல் எதுவுமே நடந்து விடவில்லை என்றும் ஆணவத்துடனும், திமிருடனும், அலட்சியத்துடனும் யாரும் தன்னை அசைத்து விட முடியாது என்ற நம்பிக்கையுடனும் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார்.




இந்தியாவின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிக்கும் ஊழல்களை இந்த மந்திரி இன்று வரை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்றே பத்திரிக்கை தகவல்களில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.


 மந்திரிசபையில் உள்ள மந்திரிகளின் செயல்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பேற்று அவர்களை வழி நடத்த வேண்டிய பிரதமரோ இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருந்த பொழுதிலும், அன்றாடம் பத்திரிகைகளும், எதிர்கட்சியினரும் அவரிடம் மீண்டும் மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்டுக் கொண்ட போதும், அவற்றையெல்லாம் காணாதவர் போல கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டு செயல் படுகிறார் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

தனக்குக் கீழே செயல் படும் மந்திரிகளின் ஊழல்களை கண் கொண்டு பார்க்க மாட்டேன், காது கொண்டு கேட்க்க மாட்டேன், வாய் கொண்டு பேச மாட்டேன் என்று காந்தியின் மூன்று குரங்குகள் போல அமைதி காக்கிறார் பிரதம மந்திரி.  அதைவிடப் பெரிய தவறாக ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு இது: எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ஊழல் மந்திரி தவறு செய்யும் பொழுதெல்லாம் தனக்குக் கீழேயுள்ள புலனாய்வு அமைப்பு தன் கடமையைச் செய்ய விடாமலும் அதே பிரதமர் தடுத்து வருகிறார்.

பிரதம மந்திரியின் ஆளும் கட்சியோ தன் கட்சி உறுப்பினர்கள் தவறு செய்து மாட்டிக் கொள்ளும் பொழுது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதுமானது, கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுக்கு அது பொருந்தாது என்று நினைக்கிறது. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது ஒன்றே அதன் குறியாக இருக்கிறது. அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளது.
காங்கிரஸின் அதிகாரபூர்வ பேச்சாளர் சிங்வி, ராஜா மீது எவ்வித குற்றசாட்டுக்கும் ஆதாரமே இல்லையே, எதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழுப்பூசணிக்காயையும் கொஞ்சம் கூட மனசாட்சியும் நேர்மையும் இன்றி சோற்றில் மறைக்கிறார்.

நாடு முழுவதும் தீவீரவாதமும், நக்சல் பயங்கரமும் நடந்தாலும் அவற்றையெல்லாம் அடக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல், தீவீரவாதிகளிடமும், பயங்கரவாதிகளிடமும் மென்மையாக நடந்து கொள்வதன் மூலம் அடுத்த தேர்தலில் தன் ஓட்டு வங்கியைத் தக்க வைப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தன் ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக அதன் மந்திரிசபையின் முக்கிய மந்திரி ஒருவர் அடிக்கும் கொள்ளையையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.
ஆக பயங்கரவாதிகளிடம் மட்டும் இன்றி கொள்ளைக்காரர்களிடமும் காங்கிரஸ் கட்சி அனுசரணையாக இருக்கவே விரும்புகிறது. இப்படியாகப் பட்ட ஒரு கட்சியையும், பிரதமரையும் நம்பி ஓட்டுப் போடும் மக்களும் இருக்கும் வரை இந்த தேசத்திற்கு விமோசனமே கிடையாது.
அரசு இயந்திரங்கள்:
ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற ரீதியில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர் கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே அரசு இயந்திரத்தை இந்த காங்கிரஸ் அரசால் பயன் படுத்தி வருகிறது. ஆ.ராஜாவை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று தடுக்கும் அதே பிரதமரே, குஜராத்தில் மோடியின் அரசாங்கம் மீது அதே சிபிஐ அமைப்பை ஏவி விட்டுப் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.

தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள்:

ஊடகங்கள் சொல்லுவதைப் பார்த்தால், பொதுத்துறை நிறுவனங்களான டாடா போன்ற மக்கள் நம்பிக்கை பெற்ற பெரு நிறுவனங்கள் கூட நீரா ராடியா போன்ற இடைத்தரகர்களை வைத்துச் செயல் பட்டது அவர்கள் பெற்ற நன் மதிப்பை குலைத்து விட்டது என்று தெரிகிறது.

ஆளும் கட்சியிடம் தங்கள் நிறுவனங்களுக்கான சலுகைகளைப் பெற இடைத் தரகர்களைப் பயன் படுத்துவது சகஜமான ஒரு காரியம். என்றாலும் கூட பிரதமரின் உரிமையில் கூடத் தலையிடும் கீழ்த்தரமான வேலைகளை அத்தனை பெரு நிறுவனங்களும் செய்து வருகின்றன என்பது இந்த ஊழல் விசாரணை மூலமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ராஜாவின் அராஜகங்களை எதிர்த்து எஸ்டெல் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கல் முறைகேடானது என்று வழக்குத் தொடர்ந்தது.
ஆனால் அந்த நிறுவனத்தையும் மிரட்டி வழக்கு வாபஸ் வாங்க வைக்கப் பட்டது. அந்த நிறுவனத்தின் பிற லைசென்சுகளை ரத்து செய்யப் போகிறோம் என்று ராஜா நோட்டீஸ் அனுப்பியதால் வேறு வழியின்றி அந்த நிறுவனமும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது. இருந்தாலும், ராஜா மிரட்டியதால் மட்டுமே வாபஸ் வாங்க நேர்ந்தது என்ற உண்மையை அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள்:

எதிர்க்கட்சிகளின் நிலையோ இன்னும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. 1 லட்சம் கோடி ரூபாய் என்பது பிரமாண்டமான ஒரு ஊழல். இந்த ஊழலை பிரதான எதிர்க்கட்சியான பாஜக எப்படி கையாண்டிருக்க வேண்டும்? அது நினைத்திருந்தால் பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்து இந்த 2ஜி ஏலமே நடக்க விடாமல் செய்திருக்கலாம். அத்வானி சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்திருக்கலாம். ஆனால் அதை எதையுமே செய்யாமல் சம்பிரதாயமான பலவீனமான ஒரு எதிர்ப்பையே இன்று வரை காட்டி வருகிறது.

60 கோடி ரூபாய் போஃபோர்ஸ் ஊழலின் பொழுது வானமே இடிந்து விழுந்து விட்டது போல ருத்ரதாண்டவம் ஆடிய இடதுகளும் இன்னபிற கட்சிகளும் அதை விட ஆயிரம் மடங்குக்கும் மேலான இந்த ஊழலில் லேசாக முனகுவதும் அவ்வப்பொழுது பிரதமருக்கு லெட்டர் போடுவதும் மட்டுமே தங்கள் கடமை என்று ஒதுங்கிக் கொள்கின்றன.
நாடு தழுவிய போராட்டம் எல்லாம் கிடையாது. நாளைக்கு தமிழ் நாட்டில் பிச்சையாகக் கிடைக்கும் நான்கு எம் எல் ஏ சீட்டுக்களும் இரண்டும் எம் பி சீட்டுக்களும் பஞ்சம் வந்து விடுமோ என்ற அச்சம்தான் காரணம் என்று பொதுமக்கள் எண்ணுகிறார்கள்.

தமிழ் நாட்டில் திமுக வின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக மட்டுமே இந்த ஊழலை தன் வாழ்க்கைப் பிரச்சினையாகக் கருதி பாராளுமன்றத்திலும் வெளியிலும் போராடி வருகிறது. அதுவும் ஊழல் செய்தது திமுக என்பதினால் மட்டுமே இந்த எதிர்ப்பு.

இதே ஊழலை லல்லுவோ, முலாயமோ செய்திருந்தால் அதிமுக கவலைப் பட்டிருக்காது.ஜெயலலிதா இந்த ஊழலை கடுமையாக எதிர்த்து வருகிறார். அறிக்கைப் போர் நடத்தி வருகிறார். இருந்தாலும் அவரது முந்தைய ஊழல்கள் காரணமாக அவர் மீது யாருக்கும் நம்பிக்கை வருவதில்லை. இவர் மட்டும் என்ன யோக்கியமா என்ற கேள்வி உடனே எழுந்து விடுகிறது. ஜெயலலிதா தனது கூடா நட்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாகச் செய்ய நேர்ந்த ஒரு சில ஊழல்கள் இந்த மாபெரும் ஊழலுடன் ஒப்பிடும் பொழுது வங்கிக் கொள்ளையின் முன்னால் ஒரு சிறிய பிக்பாக்கெட் திருட்டுப் போன்றது. ஆனால் அவரது பெயர் கெட்டதும், அவர் மீதான நம்பிக்கை போனதும் போனதுதான்.

அரசியலில் செய்யும் சிறு தவறுகள் கூட ஒருவரது அரசியல் எதிர்காலத்தையே அழித்து விடும் என்பதை ஜெயலலிதா இன்று வரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.


ஊடகங்கள் தரும் இந்தச் செய்திகளின் காரணமாக  கீழ்க்கண்ட கருத்து பொது மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது:
“சுயநல காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் அதே நேரத்தில் ஆட்சியில் இருக்கும் திமிர் காரணமாக தாங்கள் எந்த ஊழலையும் செய்யலாம், எந்தக் கொலை பாதகங்களையும் செய்யலாம், யாரும் இந்தியாவில் இவர்களைத் தட்டிக் கேட்க உரிமையில்லை என்ற ஆணவத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியும் அவரது கட்சியினரும் அவரது குடும்பத்தாரும் செயல் பட்டு வருகிறார்கள்.”

தனது கொள்ளையை மறைக்க, தன் குடும்பத்தைப் பாதுகாக்க எவ்வளவு கீழ்த்தரமாகவும் தான் நடந்து கொள்ளலாம் என்பதை மீண்டும் மீண்டும் கருணாநிதி நிரூபித்தே வருகிறார் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.
அவரிடமிருந்து நேர்மையையும், கண்ணியத்தையும், நாட்டுப் பற்றையும், உண்மையையும் இந்த வயதில் கூட எதிர்பார்க்க முடியவில்லை என்றால் இவை என்றுமே அவரிடம் இருந்ததில்லை என்பது மேலும் உறுதியாகிறது. இனிமேலும் இவற்றை நாம் இவரிடம் எதிர்பார்க்க முடியாது.

ஒரு காலத்தில் மாநில சுயாட்சி கேட்டுப் போராடிய அதே கருணாநிதி, ஒன்றிணைந்த இந்தியாவை எதிர்த்த அதே கருணாநிதி, இன்று அதே ஒருங்கிணைந்த இந்தியாவின் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்களைக் கொள்ளை அடிக்க முடிந்திருப்பது இந்திய தேசிய உணர்விற்குக் கிடைத்த மாபெரும் அடி. இந்தக் கொள்ளையின் முழுப் பயனும் இவரது குடும்பத்திற்கும் கட்சிக்குமே சென்றிருக்கிறது என்பது வெள்ளிடைமலை. ராஜா ஒரு கருவி மட்டுமே என்பதை விபரம் தெரிந்த அனைவரும் நன்கு அறிவர்.

கருணாநிதி ஊழல் செய்வது இது முதல் முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல. சர்க்காரியா விசாரணையின் பொழுது கருணாநிதி செய்த ஊழல்கள் எல்லாம் நிரூபிக்கப் பட்டன. பின்னர் இதே காங்கிரஸ் கூட்டணியால் அவை மன்னிக்கவும் பட்டன.

அப்பொழுது கருணாநிதி கேட்டார் “தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?” என்று. புறங்கையை நக்கி, முழங்கை வரை நக்கி, முழுக்கையையும் நக்கி இன்று ஒட்டு மொத்த தேனையும் குடித்து விட்டு வெறும் புறங்கையில் வழியும் தேனை மட்டும் மக்களுக்கு எச்சில் காசாக, பிச்சைக் காசாக, ஓட்டுப் போட லஞ்சப் பணமாக எறிந்து கொண்டிருக்கிறார். புறங்கையை நக்கியதெல்லாம் அந்தக் காலம்; இப்பொழுது முழுத் தேனையுமே கடத்தி விடுகிறார்கள்.

இப்படிக் கொள்ளையடிக்கப் பட்ட பணத்தைக் கொண்டுதான் கருணாநிதியால் தமிழ் நாட்டில் ஒரு நாலு கோடி வாக்காளர்களுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முடிகிறது. இந்த ஊழல் மூலம் கிட்டிய ஆயிரக்கணக்கான கோடிகளில் வெறும் ஒரு 4000 கோடி ரூபாய்களை மட்டுமே தமிழ் நாட்டு மக்களுக்கு வாக்கரிசியாக அளித்து அவர்களின் ஓட்டுக்களை இவர் எளிதாகப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட முடியும். மீண்டும்.
இந்த ஊழலில் கிடைத்த வருவாயில் இருந்து ஒரு சிறிய தொகையை எடுத்து மீண்டும் மக்களுக்குக் கொடுக்கும் லஞ்சமாக முதலீடு செய்து இதை விட பெரிய ஊழலில் இதை விட பெரிய தொகையை அறுவடை செய்து விடுவார்கள்.  இதை விட பெரிய ஊழலைச் செய்து இதை விட அதிகமாகக் கொள்ளையடிக்கலாம். இது ஒரு விபரீத சுழற்சி. இது போன்ற பெரும் ஊழல்கள் மாபெரும் ஜனநாயகப் படுகொலையில் முடிந்து தேர்தலைக் கேலிக் கூத்தாகச் செய்து விடும்.

இன்று இதை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சிக்கே இந்த ஊழல்கள் எமனாக முடியும்.

தலித்துகள்:

தங்களது சுயநலக் கொள்ளைகளுக்கு அரசியல்வாதிகள் தலித்துகளை கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். தங்களுக்குக் கிடைக்கும் தண்டனைகளையும், தாங்கள் பெற வேண்டிய தாக்குதல்களையும் இந்தக் கேடயங்கள் அனுபவிக்கும்படி செய்து விடுகின்றனர். கிள்ளுக் கீரை போல தலித்துகளை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம்.

அதனால்தான் இந்த ஊழலில் ராஜாவைக் காக்கும் பொருட்டு மிகக் கேவலமான, அசிங்கமான ஒரு காரியத்தையும் இந்தக் கருணாநிதி செய்துள்ளார். அதுதான் “தலித் என்பதினால் ஆதிக்கச் சக்திகள் ராஜாவை குற்றம் சாட்டுகிறார்கள்” என்று மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்வது.

கருணாநிதி சொல்வது உண்மையானால் ஏன் ஜெயலலிதாவின் மீது டான்சி முறைகேட்டில் வழக்குப் போட்டார்கள்? ஏன் நரசிம்ம ராவை குற்றம் சாட்டினார்கள்? எதனால் ராஜீவ் காந்தியை போபர்ஸ் ஊழலில் துரத்தித் துரத்தி அடித்தார்கள்? சசி தரூர் ஏன் பதவி விலகினார்? இவர்கள் எல்லாம் உயர் ஜாதி அரசியல்வாதிகள் அல்லவா? இவர்கள் எல்லோரும் தலித் அல்லவே? தலித் என்பதற்காக பாலகிருஷ்ணனுக்கு தலைமை நீதிபதி பதவி கிட்டாமல் போனதா? மீரா குமாருக்கு சபாநாயகர் பதவியை யாராவது எதிர்த்தார்களா?
கருணாநிதி பரப்பும் இந்த அவதூறை முதலில் தலித்துக்கள் எதிர்த்துப் போராட வேண்டும். அவர்களுக்கு இழைக்கப் பட்ட பெருத்த அவமானம் இந்தக் குற்றச்சாட்டு.

பத்திரிக்கைகள்/தொலைக்காட்சிகள்:
இந்த விஷயத்தில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நடந்து வரும் விதம் அரசியல்வாதிகளின் செயலை விடக் கேவலமாக இருக்கின்றது. முக்கியமாகத் தமிழகப் பத்திரிகைகள் இந்த ஊழலைக் கண்டு கொள்ளவேயில்லை. எந்த தினசரிகளிலும் இது குறித்த முழு விபரமோ செய்தியோ வெளியிடப் படுவதில்லை.

தமிழ் பத்திரிகைகளையும், டிவிக்களையுமே நம்பி தங்கள் பொதுப் புத்தியை வளர்த்துக் கொள்ளுபவர்களாகத்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். இவர்களை அறியாமையில் இருந்து மீட்க வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூணோ இந்தக் கொள்ளையை மூடி மறைப்பதன் மூலம் இந்தக் கொள்ளைக்குத் துணை போய்க் கொண்டிருக்கின்றது.

சென்னை விமான நிலையத்தில் ராஜாவைக் கேள்வி கேட்ட பெண் நிருபர்களை ராஜாவும் அவரது அடியாட்களும் பிடித்துத் தள்ளி தாக்கியிருக்கிறார்கள்.

இருந்தாலும், தமிழக அரசின் அச்சுறுத்தல்களுக்கும் அராஜகங்களும் பயந்து நடுங்கிக் கொண்டும், அரசு வீசும் எலும்புத் துண்டுகளான அரசு விளம்பரங்களுக்கும் ஆசைப் பட்டுக் கொண்டும் நம் பத்திரிகைகள் இந்த ஊழலை ஒட்டு மொத்தமாக மூடி மறைத்து விட்டன என்பதே உண்மை.

தமிழ் மக்களின் இதயத் துடிப்பு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் விகடன் குழுமத்தின் ஜீனியர் விகடன் பத்திரிகையில் இந்த ஒட்டு மொத்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் வெளியிடாமல் இதில் சம்பந்தப் பட்டுள்ள கனிமொழி, ராஜாத்தி அம்மையார் ஆகியோரின் பெயர்களை மறைத்து விட்டு மலிவான ஒரு கட்டுரையை மட்டும் வெளியிட்டு தன் தாழ்ந்த தரத்தை மேலும் தாழ்த்திக் கொண்டிருக்கிறது என்று மற்ற ஊடகங்களோடு ஒப்பிடுபவர்கள் எண்ணுகிறார்கள்.

ஒரு நரசிம்மராவுக்கு இரண்டு கோடி ரூபாய்கள் கொடுக்கப் பட்டது என்ற விவகாரத்திலும், ராஜீவ் காந்திக்கு 60 கோடி லஞ்சம் கொடுக்கப் பட்டது என்ற ஊழலிலும், ஜெயலலிதாவுக்கு நூறு செருப்புக்கள் இருந்தன என்பதைக் காட்டுவதிலும், நித்யானந்தாவின் அந்தரங்கங்களையும் காட்டுவதில் பேரார்வம் காட்டிய நம் தமிழகப் பத்திரிகைகள் ஊழல்களுக்கு எல்லாம் தாயான இந்த 1 லட்சம் கோடி ரூபாய் ஊழலைப் பொருத்தவரை தங்களது சகல அங்கங்கங்களையும் பொத்திக் கொண்டு இருக்கின்றன. இது இந்த ஊழலுக்கு நம் பத்திரிகைகளும் விலை போன கொடுமையைத்தான் காட்டுகின்றன.
இந்திய அளவில் இந்துத்துவ தீவீரவாதத்தை (?!) அழிக்க அவதாரம் எடுத்துள்ள செக்யூலரிஸ்டுகளான பரக்கா தத் என்ற டெலிவிஷன் பத்திரிகையாளரும், வீர் சங்வி என்ற பத்திரிகையாளரும் இந்த ஊழலில் ராஜாவை மந்திரியாக நியமிக்கும் பொருட்டு கனிமொழியின் சார்பாக தரகு வேலை செய்திருப்பதாக சிபிஐ விசாரணை உறுதிப் படுத்துகிறது. நரேந்திர மோடியைத் தூக்கில் போட வேண்டும் என்று டெலிவிஷனில் காட்டுக் கூச்சல் போடும் பரக்கா தத்தின் நேர்மை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கேவலம் காசு வாங்கிக் கொண்டு தரகு வேலை செய்யும் ஒரு நான்காம் தர பெண்மணிதான் இவ்வளவு நாட்களும் செக்குலார் வேடம் போட்ட இந்த பரக்கா தத் என்பது இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. இருந்தாலும் எந்தவித வெட்கமோ அவமான உணர்வோ தார்மீகப் பொறுப்போ இல்லாமல் ஒரு கேவலமான ப்ரோக்கர்களாக, காசு வாங்கிக் கொண்டு ஆளை அமர்த்தித் தரும் தரகர்களான பரக்கா தத்துகளும், வீர் சங்விகளும் இன்னமும் தங்களை இந்து வெறியில் இருந்து பாரதத்தைக் காக்க வந்த பரமாத்மாக்களாகக் காட்டிக் கொண்டு டெலிவிஷனில் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதையும் இந்திய மக்கள் பார்த்து கை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இணைய ஊடகங்கள்:

தமிழ் நாட்டின் பத்திரிகைகளும், டிவிக்களும் தான் கடும் மொளன விரதம் அனுஷ்டிக்கின்றன என்றில்லை; தமிழ் மக்களின் அறிவு ஜீவிக் குரலாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் பெரும்பாலான வலைப்பதிவர்கள் கூட இந்த விஷயத்தைப் பற்றி வாய் திறப்பதில்லை.

 
நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டும் என்று கதறிய தமிழ் வலைப்பதிவர்கள், பார்வதியை சிகிச்சைக்கு அனுமதிக்காததற்குக் கூச்சல் போட்ட தமிழ் வலைப்பதிவர்கள், ஒரு சினிமா வெளிவந்தால் அடித்துப் பிடித்துக் கொண்டு விமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதையைப் போய் எழுதித் தொலையும் தமிழ் ப்ளாகர்கள், அறிவு ஜீவித் தனம் என்ற போர்வையில் இனவெறியைப் பரப்பும் வலைப் பதிவர்கள், தமிழ் நாட்டின் முதல்வரும் அவர் குடும்பமும் ஒரு தமிழ் நாட்டு மந்திரி மூலமாக 1 லட்சம் கோடி கொள்ளையடித்தது பற்றி வசதியாகக் கண்டு கொள்ளவேயில்லை.
இதை விடக் கொடுமை தமிழில் கொஞ்சம் சிந்தித்து எழுதக் கூடிய ஒன்றிரண்டு வலைப்பதிவர்கள்கூட இதில் ராஜா ஊழல் செய்திருக்க எந்த வித முகாந்திரமுமே இல்லை என்று ஊருக்கு முன்னால் ராஜாவுக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கி விட்டிருந்தார்கள்! இன்று இவ்வளவு விஷயங்கள் வெளி வந்த பின்னால் முகத்தை எங்கே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இட்லி வடை என்ற பதிவர் ஒருவர் மட்டும் செஸ் போட்டிகளுக்கு நடுவே இந்த ஊழல் சம்பந்தமான ஏதோ நாலு பத்திரிகைச் செய்திகளைப் போட்டு ஒப்பேத்தியிருக்கிறார். மற்றவர்களுக்கு எல்லாம் இப்படி ஒரு ஊழல் நாட்டில் நடக்கவேயில்லை.

தமிழ் ப்ளாகர்களுக்கு எல்லாம் இன்னும் நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டுமா அல்லது கழுவில் ஏற்ற வேண்டுமா என்றே இன்னும் தீர்மானம் செய்து முடியவில்லை! இதுவே ஒரு ஜெயலலிதா ஒரு லட்சம் வாங்கியிருந்தால் இன்று தமிழ் இணைய உலகமே பற்றி எரிந்திருக்கும்.

 இந்திய பொது மக்கள்:
இறுதியாக இந்திய பொது மக்களையே நான் இந்த ஊழல்கள் அனைத்திற்கும் காரணமான குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டுவேன். கொள்ளை போவது தங்கள் சொத்து என்பதை அறியாமலேயே இந்தக் கயவர்களுக்குப் போய் மீண்டும் மீண்டும் தங்களது ஓட்டுக்களைப் போட்டு தங்களுக்குத் தாங்களே மக்களும் கொள்ளி வைத்துக் கொள்கிறார்கள். கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொள்கிறார்கள். ஜனநாயகம் என்னும் யானை தன் தலையில் தானே சகதியை அள்ளிக் கொட்டிக் கொள்கிறது.
ஆக மத்தியிலும் மாநிலத்திலும் தங்களை ஆளும் கட்சிகள் தங்களது பணத்தை, அதுவும் 1 லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்து விட்டு தங்களை வளப்படுத்திக் கொண்ட அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் மீண்டும் அதே கொள்ளைக்காரர்களிடம் காசு வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஓட்டுப் போடத் தயாராகி வருகிறார்கள். ஒரு ஓட்டுக்காகக் இவர்களுக்கு கொடுக்கப் படும் பிச்சைக்காசு இவர்களிடமிருந்தே திருடப் பட்ட பணம் என்பதே தெரியாமல் அற்பப் பணத்திற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும் தங்கள் எதிர்காலத்தையும் தன்மானத்தையும், பாதுகாப்பையுமே அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ராஜா தன் சொந்த ஊரான பெரம்பலூருக்குச் சென்றிருந்த பொழுது கிராம மக்கள் எல்லாரும் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் நாள் முழுவதும் இல்லை என்று அவர் காரை மறித்துப் போராடியிருக்கிறார்கள். கோடிக் கோடியாகக் கொள்ளையடிப்பவரின் சொந்த மக்களுக்குக் குடிக்க நீரில்லை, மின்சாரம் இல்லை. கடும் கோடை வெப்பத்தில் நீரில்லாமல் மின்சாரம் இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜா தனது ஏ சி சொகுசுக் காரில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க, போராடிய மக்களை போலீசார் அடித்து விரட்டியிருக்கிறார்கள். தகுதியில்லாத கயவர்களுக்கு ஓட்டுப் போட்டால் இதுதான் நடக்கும் என்பதை மக்கள் இனியாவது உணர வேண்டும். இனியாவது மக்கள் திருந்த வேண்டும்.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையே எந்தவித பொது அறிவும் இன்றி விழிப்புணர்வும் இன்றி, சமூக அக்கறையும் இன்றி, தங்கள் எதிர்காலம் குறித்த உணர்வு இன்றி, தங்கள் சந்ததியினர் குறித்த எதிர்கால பொறுப்பு இன்றி, தேசத்தின் மீது அக்கறையின்றி, சுயநலமும் அறிவின்மையும் மேலிட மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் இந்த போக்கு ஒன்றே இது போன்ற ஊழல்களின் ஊற்றுக் கண், அடிப்படை. அவர்கள் விழித்துக் கொள்ளாத வரை ராஜாக்கள் இந்தியாவைச் சுரண்டுவது நிற்கப் போவதில்லை.

பாராட்டுதலுக்கு உரிய சிலர்:
இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலாகவே மிகுந்த பொறுப்புணர்வுடனும், பத்திரிகையாளருக்குரிய கடமையுணர்வுடனும், தேசத்தின் மீது உண்மையான அக்கறையுடனும் இந்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் புலனாய்வு செய்து நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவித்த ஒரே பத்திரிகை கல்கத்தா மற்றும் டெல்லியில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான  “தி டெய்லி பயனீர்” மட்டுமே.

அதன் புலனாய்வுப் பிரிவு பத்திரிகையாளரான கோபிகிருஷ்ணன் தான் இந்த ஊழலை உலகத்திற்கு அம்பலப் படுத்தியவர். இதுதான் உண்மையான புலனாய்வு முயற்சி.

பயனீர் பத்திரிகை உடனடியாக இந்த ஊழல் குறித்தான பதிவுகளை நீக்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நீரா ராடியாவின் வக்கீல் நோட்டீஸ் விட்டுள்ளார். பயனீர் ஆசிரியர், “நாங்கள் சொல்வது சத்தியம், கோர்ட்டில் சந்திக்கத் தயார், மிரட்டலுக்குப் பணிய முடியாது” என்று அறிவித்து விட்டார்.

ஆட்சி தந்த ஆணவமும், செல்வாக்கும், ரவுடிகளின் துணையும், அரசு இயந்திரங்களும், பணமும் கொண்ட மாபெரும் ஆதிக்க சக்தியான ஒரு ஆ.ராஜாவை ஒரு சிறிய பத்திரிகையாளரான கோபிகிருஷ்ணன் அச்சமின்றி துணிவுடன் இந்த அளவு எதிர்த்துப் போராடி உண்மையை வெளிக் கொணர்ந்தது இன்றைய சூழ்நிலையில் மாபெரும் ஒரு சாதனையே. பயனீர் நாளிதழ் வெகுவாகப் பாராட்டப் பட வேண்டிய சேவையை இந்தியாவுக்குச் செய்துள்ளார்கள். அவர்களது துணிவுக்கும், கடமையுணர்வுக்கும் ஒட்டு மொத்த தேசமும் கடன் பட்டுள்ளது. இவர்களைப் போன்றவர்கள் இருப்பதினால்தான் இந்திய ஜனநாயகத்தின் மீது நமக்கு இன்னமும் ஒரு நம்பிக்கை இழை மிச்சம் இருக்கின்றது. வாழ்க அவர்கள் பணி.

(இந்தக் கட்டுரையும்கூட பெரும்பாலும் பயனீர் பத்திரிகையின் கட்டுரைகளின் அடிப்படையிலேயே எழுதப் பட்டுள்ளது. பயனீர் பத்திரிகையைப் பாராட்டி உங்கள் கருத்துக்களை அனுப்பி அவர்களை இந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவரும் ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பயனீர் பத்திரிகையின் இணைய முகவரி:  http://www.dailypioneer.com.

திரு. ஜே. கோபிகிருஷ்ணன் அவர்களின் வலைப் பக்கத்தில் இந்த ஊழல் சம்பந்தமான அனைத்து கட்டுரைகளையும் விரிவாகப் படித்தறியலாம். அவருடைய வலைப்பதிவு இங்கே. ராஜாவின் ஊழலைத் தவிர அன்புமணி ராமதாஸின் ஊழல், இந்திய ராணுவ ஊழல்கள் போன்ற பல்வேறு ஊழல்களை அம்பலப் படுத்திய அவரது புலனாய்வு கட்டுரைகள் பல அவரது வலைத் தளத்தில் படிக்கக் கிட்டுகின்றன.)

ஹெட்லைன்ஸ் டுடே டி வி, நாட்டை விலை பேசும் தரகியான நீரா ராடியாவோடு ராஜாவும் கனிமொழியும் தனித்தனியாக நடத்திய உரையாடல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பதிவு செய்தது மத்திய அரசின் பொருளாதார உளவுப் பிரிவு.

இவர்களது தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்த டேப்புக்களை இந்த டி வி எப்படியோ பெற்று வெளியிட்டு விட்டது. இந்த உரையாடல்களை வெளியிடக் கூடாது என்று நீரா ராடியா கோர்ட்டுக்குப் போய் அவரது மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. ராஜா அப்படிப் பேசவேயில்லை என்று மறுக்கிறார்; ஆனால் ராடியாவோ நாங்கள் பேசியதை எப்படி வெளியிடலாம் என்று கேட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்!

சுயநலக் காரணங்களுக்காகவே இருந்தாலும் கூட, அதிமுக மட்டும் எதிர்க்காமல் போயிருந்தால் இந்த ஊழல் நடந்தது கூட எவருக்கும் தெரியாமல் போயிருந்திருக்கும். அந்த வகையில், அதிமுகவின் எதிர்ப்பு செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.

இந்த ஊழலை எதிர்த்து நீதி மன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி. எதிர்க்கட்சியான பாஜக செய்ய வேண்டிய வேலையை தனி நபராக ஒரு சுவாமி செய்திருக்கிறார். அவரது கடந்த கால தவறுகளினால் அவர் மீதும் பலருக்கும் இன்று நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் கூட, அவரது போராட்டங்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

எனது நோக்கம் என்ன?
எனது இந்தக் கட்டுரையின் நோக்கமே இந்திய மக்களிடம் ஒரு சிறிய விழிப்புணர்வை ஒரு மிகச் சிறிய அளவில் ஒரு சிலரிடமாவது உருவாக்குவது மட்டுமே.

சங்கை ஊதிக் கொண்டேயிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் இவர்கள் காதும் கேட்காமலா போய் விடும் என்ற ஒரே நம்பிக்கையினால் மட்டுமே கோபிகிருஷ்ணன்களும், பயனீர்களும், தமிழ் ஹிந்துக்களும் இன்றும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

என்ன செய்யப் பட வேண்டும்?
மன்மோகன் சிங்கை பிரதமராகக் கொண்டு சோனியாவால் ஆட்டுவிக்கப் படும் இந்த ஆட்சி இருக்கும் வரை ராஜா தண்டிக்கப் படப் போவதில்லை. அவர் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மீட்கப் படப் போவதும் இல்லை.

ஆனால் என்றாவது ஒரு நாள் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, இந்த தேசத்தின் மீது உண்மையான பற்று கொண்ட ஒரு அரசு வருமானால், இந்த ஊழலுக்கு முதல் காரணமான தரகர் நீரா ராடியா, ஆ.ராஜா, அவர் கொள்ளையடித்து கப்பம் கட்டிய அவரது கட்சித் தலைவர், அவரது துணைவி, மகள், பிற குடும்பத்தினர், ராஜாவுக்கு உதவிய மற்ற தரகர்கள், பத்திரிகையாளர்கள் பரக்காதத், சங்வி, ராஜாவுக்கு உதவிய அரசு அதிகாரிகள், இவர்கள் அனைவரையும் விட இந்த ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருந்த அரசியல்வாதிகள் அனைவரும் விசாரிக்கப் பட்டு அவர்களது உடந்தைகள், ஊழல்கள் இந்த நாட்டு மக்களுக்கு அறிவிக்கப் பட்டு, மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட வேண்டும்.

அமெரிக்கா போன்ற தேசங்களில் இவை போன்ற ஊழல்கள் வெளியில் வந்து விசாரிக்கப் பட்டு குற்றம் நிரூபிக்கப் படும் பொழுது சம்பந்தப் பட்ட குற்றவாளிகளுக்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான கடும் தண்டனை அளிக்கப் படுகிறது. அதே போன்ற தண்டனைகள் இந்தியாவிலும் நடைமுறைக்கு வரவேண்டும். அதற்கான அரசியல் மாற்றத்தை மக்கள் உருவாக்க வேண்டும். இந்தக் குற்றவாளிகளுக்கு மக்களின் சக்தியினால் மட்டுமே தண்டனை அளிக்க முடியும். அதைச் செய்வது மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது.

ஒரு வேளை எதிர்கட்சிகளின், கோர்ட்டின் வற்புறுத்தலுக்கு இணங்கி வேறு வழியின்றி ராஜா பதவியிறங்கினாலோ அல்லது வேறு துறைக்கு மாற்றப் பட்டாலோ கூட அடுத்த ஆட்சி இவரது குற்றத்தை நிரூபித்து இவருக்கும் கூட்டாளிகளுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும். இவர் கொள்ளையடித்த பணத்தை உலகின் எந்த மூலையில் ஒளித்து வைத்திருந்தாலும் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து இந்தியாவின் அடிப்படை வசதிகளை, கல்வியை, கட்டுமானங்களை வலுப்படுத்தப் பயன் படுத்த வேண்டும்.

இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நம் அனைவரிடமும் ஓட்டுரிமை என்னும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம் இருக்கிறது, அதைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளைக்காரர்களைப் பூண்டோடு ஒழிக்க உறுதி பூணுவோம். இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் அதற்கு ஒரு ஊக்கியாக விழிப்பூட்டும் நிகழ்வாக இருக்கட்டும். இந்தக் கெடுதியில் இருந்தும் கூட ஒரு நன்மை மலரட்டும்.
இன்று இந்தியாவுக்கு ஆண்டிமுத்து ராஜா ஏற்படுத்தியுள்ள இழப்பு 1 லட்சம் கோடி ரூபாய்கள். இந்தப் பணம் “நம் ஒவ்வொருவரது உழைப்பின் பயன்” என்பதை அறிவோம். நம் வீட்டுச் சொத்து கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது அவசியம். கொள்ளையர்களை இனம் கண்டு தண்டிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

பாடுபட்டு வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இன்று கொள்ளையர்கள் கைகளில் சிக்கிச் சீரழிகின்றது. நம் தேசத்தின் வளங்கள் அனைத்தும் சூறையாடப் படுகின்றன. இயற்கை வளங்களிலும், பொருளாதாரத்திலும், தார்மீக கோட்பாடுகளிலும், நேர்மை நீதி நியாயங்களிலும், அறவுணர்வுகளிலும் திவாலாகிப் போன ஒரு தேசத்தையா உங்களது குழந்தைகளுக்கு விட்டு விட்டுப் போகப் போகிறீர்கள்?
சிந்தியுங்கள்






ஸ்பெக்ட்ரம் உண்மைகள் ஓர் அலசல்!! நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 02

ஸ்பெக்ட்ரம் அலைப்பரவல் சம்பந்தேமேயில்லாமல் பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப் பட்டது என்று ஒரு சில ஊடகங்கள் சொல்வதைப் பார்த்தோம்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் எந்தவொரு பாமரனுக்கும் எழும் சில அடிப்படைக் கேள்விகளையும் அதற்கு ஊடகங்கள் தரும் பதில்களையும் கீழே காணலாம்:
1. ஏன் தொலைத் தொடர்பு சம்பந்தப்பட்ட ஒரு உயர் தொழில்நுட்ப வளமான ஸ்பெக்ட்ரம் அலைப்பரவல் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விற்கப் படாமல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்கப் பட்டன?
நியாயமான கேள்வி. இந்த நிறுவனங்களுக்கும் ஸ்பெக்ட்ரத்திற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. இருந்தாலும் இந்தக் கம்பெனிகளுக்கு அரசாங்கம் தனது அரிய வளம் ஒன்றை தானம் செய்தது போல 2001ல் நிர்ணயிக்கப் பட்ட விலைக்கு விற்றிருக்கிறது.

ஏன்?

ஏனென்றால் இந்த நிறுவனங்கள் எல்லாம் மந்திரி ராஜாவின் மற்றும் அவரது கட்சித் தலைவரின் உறவினர்களின் பினாமி நிறுவனங்கள் என்று சொல்லுகின்றன ஊடகங்கள்.  இதை பயனீர் பத்திரிக்கையும் (The Pioneer), அதன் பிறகு அரசு உளவு அமைப்பான சிபிஐயும் கண்டு பிடித்திருக்கின்றனர். ஆக ஆதாயம் இல்லாமல் ஆண்டிமுத்து ராஜா இந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்கவில்லை என்கின்றனர் இவர்கள்.

அவர்கள் கூற்றுப்படி, அரசு வளத்தைக் குறைந்த விலைக்கு தனக்கும் தனக்கு வேண்டப் பட்டவர்களுக்கும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். கடைத்தேங்காயை எடுத்துத் தனக்குத் தானே உடைத்துக் கொண்டிருக்கிறார்.

2. அப்படி இவரது பினாமி கம்பெனிகளுக்கு விற்றதால் இவருக்கு என்ன லாபம்?
நல்ல சந்தேகம்.

2001ல் முடிவு செய்யப் பட்ட விலையின் அடிப்படையிலேயேதான் ஸ்பெக்ட்ரம் விற்கப் பட வேண்டும் என்று இவர் பிடிவாதமாக பல எதிர்ப்புக்களையும் மீறி முடிவு செய்யும் பொழுதே மத்திய மந்திரி சபை சுதாரித்துக் கொண்டு இவரைக் கட்டுப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால், லேசான சில எதிர்ப்புக்களுடன் இவர் தொடர்ந்து தன் விற்பனையை மேற்கொள்கிறார்.

அப்படி மேற்கொள்ளும் பொழுது திட்டமிட்டு குறிப்பிட்ட சில கம்பெனிகளுக்கு மட்டுமே இந்த விற்பனையை செய்து முடித்து விடுகிறார். ஏனென்றால் இவர் விற்ற நிறுவனங்களுக்கும் இவருக்கும், இவரது கட்சித் தலைவரின் குடும்பத்தினருக்கும் தொடர்புகள் இருக்கின்றன என்று ஊடகங்கள் சொல்லுகின்றன. அடிப்படையில் இவை யாவுமே இவரது மறைமுகமான நிறுவனங்களே அல்லது இவருக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே என்பதை சிபிஐ இப்பொழுது கண்டு பிடித்திருக்கிறது என்பதையும் இந்த ஊடகங்கள் மறக்காமல் சொல்லுகின்றன.

பண்டோராவின் பெட்டி போல ஆரம்பம் எது, முடிவு எது, குற்றம் செய்தவர்கள் யார் என்பவற்றைத் தெளிவாகச் சொல்ல முடியாதபடி வலைப் பின்னல்களாக மிகக் கச்சிதமாக இந்த ஊழல் நடந்திருக்கிறது.

இவர் உரிமைகளை விற்றதாகச் சொல்லப்படும் சில கம்பெனிகளின் வண்டவாளங்களைப் பார்க்கலாம்.

முதலில் ஸ்வான் என்னும் கம்பெனிக்கு 13 வட்டாரங்களுக்குரிய ஸ்பெக்ட்ரம் பங்குகள் 1537 கோடி ரூபாய்களுக்கு விற்கப் பட்டிருக்கின்றன என்கின்றன தகவல்கள்.  அந்த ஸ்வான் நிறுவனமோ தன்னை ஒரு கட்டிட நிறுவனமாக பதிவு செய்துள்ளது. ஏற்கனவே அனில் அம்பானி வசம் இருந்த இந்த நிறுவனத்தை இன்னொருவர் மூலமாக வாங்கி, இந்த ஸ்பெக்ட்ரத்தை வெறும் 1537 கோடி ரூபாய்களுக்கு முதலில் அரசிடம் இருந்து இந்தக் கம்பனியார் வாங்குகிறார்கள். வாங்கிய கையோடு எலிஸாட் என்றொரு மத்திய கிழக்கு நிறுவனம் ஒன்றிற்கு 4500 கோடி ரூபாய்க்கு 100% மேல் லாபம் வைத்து விற்கிறார்கள். பின்னர் அந்தக் கம்பெனியோ வேறு ஒரு நிறுவனத்திற்கு இன்னும் அதிக விலைக்கு வாங்கிய பங்குகளை விற்கிறது!

இதைப் போலவே இன்னும் சில வட்டாரங்களுக்கான உரிமை யுனிடெக் என்றொரு மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு  விற்கப் பட்டிருக்கிறது. அந்த நிறுவனமோ அரசிடம் இருந்து 22 வட்டாரங்களுக்கு 1651 கோடி ரூபாய்களுக்கு வாங்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமையை டெல்நார் எனப்படும் நார்வே கம்பெனி ஒன்றிற்கு 6120 கோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கிறது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன.

இந்த பரிவர்த்தனையில் கிடைத்த கொள்ளை லாபம் பல்வேறு இடைத்தரகு கம்பெனிகள் மூலமாக கடத்தப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுக்கு மாற்றப் பட்டிருக்கின்றது.

அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன.

இந்தத் தகவல்களின் சாரம் என்ன ?
நீங்கள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறீர்கள். அதற்கு மத்திய அரசு உடந்தையாகவோ அல்லது மறைமுக கூட்டாளியாகவோ இருந்திருக்கிறது.
நம் சொந்தப் பணம் நூறு ரூபாய்கள் பிக்பாக்கெட் அடிக்கப் பட்டால் கூட கிடந்து பதறும் பொதுஜனம், திருடியவனைப் பிடிக்கத் துடிக்கும் பொது மக்கள், தங்கள் பொதுப்பணம் 1 லட்சம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப் பட்டிருந்தும் கொஞ்சம் கூட சுய பிரக்ஞை இன்றி , சுய உணர்வு இன்றி, கவலை இன்றி, விழிப்புணர்வு இன்றி கொள்ளையடிக்கும் அதே அரசியல்வாதிகளைத் துதி பாடி, புகழ்ந்து, பாராட்டித் திரிகிறார்கள்.

இப்படி ஒரு நாட்டின் மக்கள் இருந்தால் அந்த நாடு எங்கனம் உருப்படும்?

3. 2ஜி குறைந்த விலைக்கு விற்கப் பட்டிருக்கிறது என்பது எப்படி உறுதியாகத் தெரியும்?
இப்பொழுது 3ஜி ஸ்பெக்ட்ரத்திற்காக முறையான ஏலம் நடந்து வருகிறது. கோர்ட், மற்றும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பினால் ராஜாவின் விருப்பத்தை மீறி இந்த 3ஜி ஏலம் வேறு ஒரு மந்திரி குழுவின் தலைமையில் நடந்து வருகிறது. அதன் விற்பனை நிலவரத்தின் படி 2 ஜி விற்பனை அடிமாட்டு விலைக்கு விற்கப் பட்டிருப்பது உறுதிப் பட்டு விட்டது.

சந்தை நிலவரப்படி அரசாங்கமே நேரடியாக உண்மையான தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலம் விட்டால், 1000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட 2ஜி அலைவரிசைக்கு ஈடான 3ஜி அலைவரிசையை கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கலாம் என்பதைத்தான் தற்பொழுது நடை பெறும் 3 ஜி ஏலம் உறுதிப் படுத்துகிறது.

அதன் மூலம் அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

2ஜி மோசடி விற்பனைக்கும் 3 ஜி ஏல விற்பனைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும். தனது பினாமி கம்பெனிகளுக்கு ஆ.ராஜா விற்ற விலைக்கும் தற்பொழுது சந்தை நிலவரப் படி முறையான ஏலத்தில் போகும் விலைக்கும் உள்ள வித்தியாசத்தைக்  காணலாம்.

(இது ஒரு சாம்பிள் மட்டுமே.  மொத்தப் பட்டியல் அல்ல. அதனால் கூட்டினால் லாபக் கணக்கு 1 லட்சம் கோடி.)

ஸ்பெக்ட்ரம் உண்மைகள் ஓர் அலசல்!! நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 01

இந்தியாவின் பிரதமர் யார்?
இந்தக் கேள்விக்கு ஒன்றாம் கிளாஸ் பிள்ளைகளாக இருந்தால் மன்மோகன் சிங் என்று பதிலளித்திருப்பார்கள். ஆனால் அது தவறு என்பது நாட்டு நடப்பை ஓரளவுக்காவது அறிந்த எந்தவொரு இந்தியனுக்கும் தெரிந்ததுதான்.

இந்தக் கேள்விக்கு, “சோனியா காந்தி” என்று பதிலளித்தால் ஐம்பது மார்க் கொடுக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் இந்தியாவின் பிரதமர் ”நீரா ராடியா” என்று நீங்கள் பதிலளித்திருப்பீர்கள் என்றால் உங்களுக்கு நூறு மார்க்குகள் நிச்சயம் வழங்கலாம்.

”நீரா ராடியா யார்?” என்பதை அறியாதவர்கள் மேலே படியுங்கள்.
காங்கிரஸ் காரர்களுக்கு சுயராஜ்யம் என்பது பிறப்புரிமையாக இருந்ததோ இல்லையோ; ஆனால் ஊழலும், கொள்ளையும் மட்டுமே காங்கிரசின் அதிகாரபூர்வ கொள்கையாக பிறப்புரிமையாக இன்று வரை இருந்து வருகிறது. காங்கிரசின் இந்தப் பிறப்புரிமைக்குப் பங்கம் வராமல் நம் மக்களும் சலிக்காமல் அக்கட்சிக்கு ஆதரவளித்து வருகிறார்கள். யதா பிரஜா, ததா ராஜா.

மாநிலக் கட்சிகள் வலுப்பெற ஆரம்பித்து மத்தியில் கூட்டணி ஆட்சியே யதார்த்த நிலையாக மாறிப் போய்விட்டது. இது ஆரம்பித்த வேளையில் இருந்து இந்தக் கொள்ளையடிக்கும் பிறப்புரிமையில் பிற மாநிலக் கட்சிகளும் உரிமை கோரவும், பங்கு கேட்கவும் ஆரம்பித்தார்கள். விளைவு: லல்லு யாதவ்களின் மாட்டுத் தீவன ஊழல்களும், முலாயம் யாதவ்களின் பல நூறு கோடி ஊழல்களும், கருணாநிதிகளின் தனி ஆவர்த்தன ஊழல்களும் - காங்கிரஸ் கலாச்சாரம் பிற கட்சிகளிடமும் ஆழமாக வேரூன்றிப் பரவ ஆரம்பித்தது.

இங்கே கொள்ளையடிக்கப்படும் பணம் வெளிநாடுகளில் சேமிக்கப்படுகிறது. ஸ்விஸ் போன்ற நாடுகள் நோகாமல் பணக்கார நாடுகளாக வளர்ந்து கொண்டு போக இந்தியாவில் இன்றைக்கும் ஒரு வேளை சோற்றிற்கு வழியில்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. உலக வரலாற்றிலேயே, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலம் தொடங்கி, ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து கொள்ளையடிக்கப் பட்டு வரும் ஒரே நாடு இந்தியாவாக மட்டுமே இருக்க முடியும். இந்தக் கொள்ளை இப்போதும் தொடர்கிறது.












இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.

ஊழல்களின் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் இந்த ஊழலின் கதாநாயகனும் ஒரு ராஜாதான். ஆபாசகரமான இந்த ஊழலின் நாயகன் ஆ.ராசாவேதான் என்று ஒரு சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சொல்லுவதன் அடிப்படையில்,  அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களைக் கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இந்தியாவில் இது வரை அரசாங்க நிலத்தை விற்று ஊழல் செய்திருக்கிறார்கள். நிலக்கரியை வைத்து ஊழல் செய்திருக்கிறார்கள். தண்ணீரை விற்று ஊழல் செய்திருக்கிறார்கள். மண்ணெண்ணெயை வைத்து ஊழல் செய்திருக்கிறார்கள். அரிசி, பருப்பு, எண்ணெய், ஜவுளி, வீடு, கார், பஸ், விமானம், தொலைபேசி, ராணுவம், மனிதர்கள், பெண்கள், சிறுவர்கள், மதங்கள், என்று உண்பது, உடுப்பது, படுப்பது, நின்றது, நடந்தது, பறப்பது, ஊர்வது, மிதப்பது என்று சகல விதமான உயிருள்ள உயிரற்ற படைப்புக்கள் அனைத்தையும் வைத்து ஊழல்கள் நடைபெற்று வந்தேயிருக்கின்றன. இப்பொழுது கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அலைகளை வைத்து ஒரு மாபெரும் ஊழல் அரங்கேறியிருக்கிறது. அதுதான் இந்த மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழல்.

இந்த ஊழல் உலக ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஊழல். ஏனென்றால் இந்த ஊழலின் மதிப்பு மொத்தமாக ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேலானது. ஒரு லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்கள் என்பது கூட நமக்கெல்லாம் தெரியாதுதான். 1 போட்டு பக்கத்தில் 12 சைபர்களை கை வலிக்கப் போட்டால்தான் இந்த ஒரு லட்சம் கோடிகள் என்ற கணக்கு வரும் என்று பொருளாதார மேதைகள் கம்ப்யூட்டரிடம் கேட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

முதலில் எப்படி இந்த ஒரு லட்சம் கோடியை கொள்ளையடித்தார்கள், யார் அடித்தார்கள் என்பவை பற்றி ஊடகங்கள் சொல்லுவதைப் பார்க்கலாம். ஒரு லட்சம் கோடி வருமானம் வரும் அளவுக்கு அது என்ன ஆகப் பெரிய விஷயம் என்பதில் இருந்து ஆரம்பிக்கலாம்.


ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?

வானொலி, தொலைக்காட்சி, செல் ஃபோன் என்று அனைத்து விதமான கம்பியில்லாத தொலைத் தொடர்புகளுக்கும் மின்காந்த அலைகளே ஊடகமாகச் செயல் பட்டு வருகின்றன. இந்த மின்காந்த அலைகளின் அலை நீளம், வகை ஆகியவற்றை வைத்து பகுத்து பல்வேறு தொடர்புகளுக்கு பயன் படுத்தி வருகிறார்கள். அதாவது, வானொலியின் ஷார்ட் வேவ், மீடியம் வேவ், எஃப் எம் போல, தொலைக்காட்சிகளுக்குரிய அலைவரிசைகள் போல, செல் ஃபோன்களின் பயன்பாட்டிற்கும் மின்காந்த அலைவரிசைகளே பயன்படுத்தப் படுகின்றன.

இதில் வெறும் ஒலிகளை மட்டும் அனுப்பக் கூடிய பிரிவில் வரும் அலைப் பரவல்களை 2ஜி ஸ்பெக்ட்ரம் என்றும், தகவல், பேச்சு, படங்கள் போன்ற அனைத்து விதமான தகவல் பரிமாற்றங்களையும் பரிமாறக் கூடிய அலைப் பரவல்களை 3ஜி ஸ்பெக்ட்ரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இப்படி பல்வேறு வகையில் உபயோகமாகும் அலைவரிசைகளை அரசாங்கமே கட்டுப் படுத்தி யார், யார் எந்தெந்த அலைவரிசையை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பதை பிரித்து வழங்கி நிர்வாகித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட அலை அதிர்வெண்ணை செல்ஃ போன் மூலமான தகவல் தொடர்புக்கு மத்திய அரசாங்கம் ஒதுக்குகிறது. ஒதுக்கப்பட்ட அந்த அலைப் பரவல்களில், சிலவற்றை பயன்படுத்தத் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெறுகின்றன. பெற்ற பயன்பாட்டு உரிமையின் அடிப்படையில் தத்தம் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குகின்றன.

அந்த அலைப்பரவல்கள் மூலமாக தனியார் நிறுவனங்களும், அரசாங்கத்தின் பொது நிறுவனங்களும் தொலைத் தொடர்பு சேவைகளை தத்தம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். (இது குறித்த மேலதிக அறிவியல் தகவல்களை பத்ரி அவர்களின் வலைப்பதிவில் படித்துக் கொள்ளலாம். வலைப்பதிவு இங்கே.)

இந்த அலைப்பரவல்களை கணக்கு வழக்கு இல்லாமல் எல்லோரும் இவற்றைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில், எப்பொழுது தேவை (demand) ஆதாரத்தை (supply) விட அதிகமாகிறதோ, அப்பொழுது அளவில் குறைந்த வளங்களை ஏதாவது ஒரு பொது அடிப்படையில்தான் பயனர்களுக்கு வழங்க முடியும். அதுதான் எந்தவொரு இருப்பு/தேவை சமானத்திற்குமான அடிப்படையே. அதன்படி மின்காந்த அலைப்பரவல் வளமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்தான் இயங்க முடியும்; இவற்றை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறுவனங்கள் மட்டுமே இயக்க முடியும்.

நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது எந்தவொரு அரசாங்கமும் அந்த வளங்களை, ஏலத்தின் அடிப்படையில் யார் அதிக விலையை அரசுக்குக் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் வழங்க முடியும். வழங்க வேண்டும். அப்படித்தான் எந்தவொரு அரசாங்க வளங்களுமே பிரித்து வழங்கப் படுகின்றது. அதன்படி இந்த அலைப்பரவல்களை வேண்டுபவர்களுக்கு அரசாங்கம் ஏலத்தின் அடிப்படையில் பிரித்து வழங்க முடிவு செய்தது. அங்குதான் இந்த ஊழலுக்கு அஸ்திவாரமும் போடப் பட்டது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு உதாரணம் பார்க்கலாம். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஒரு பெரிய அளவிலான நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலம் சென்னையின் மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ளது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த நிலத்தை பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு வேண்டும் என்று கோருகிறார்கள். பலத்த போட்டி நிலவுகிறது. ஆனால் இருப்பதோ பத்து ஏக்கர் நிலம் மட்டுமே. இருக்கும் பத்து ஏக்கர்களுக்கோ ஆயிரக்கணக்கான கட்டுமான வியாபாரிகளும், பெரு நிறுவனங்களும் போட்டி போடுகிறார்கள். அரசாங்கத்திற்கோ அந்த நிலம் விற்பதன் மூலமான வருவாய் தேவைப் படுகிறது. ஏனெனில், வருவாயை வைத்து அரசாங்கம் நிறைய மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ளலாம். மக்களுக்கு அந்த வருவாயையை தக்க விதத்தில் பயன் படுத்தலாம். அப்படியானால் அரசாங்கம் யாருக்கு அந்த நிலத்தை பிரித்து வழங்க வேண்டும்?

அரசாங்கத்தின் ஆட்சியாளர்களுக்கா? அவர்களது உறவினர்களுக்கா? அதிகாரிகளுக்கா? அல்லது எந்த நிறுவனம் அதிகம் ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் தருகிறதோ அந்த நிறுவனங்களுக்கா? யாருக்குத் தர வேண்டும்? எப்படித் தர வேண்டும்? எலிமெண்டரி ஸ்கூல் பையனிடம் இந்தக் கேள்விவைக் கேட்டால் கூட மிக எளிதாக விடையைச் சொல்லி விடுவானே? நிலத்தின் மதிப்பை ஏலத்துக்கு விட்டு யார் அதிக விலைக்குக் கேட்கிறார்களோ அவர்களுக்கே அந்த நிலம் விற்கப் பட வேண்டும் என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?

இந்த ஒரு எளிய விடை இந்திய அரசாங்கத்திற்கு, அதிலும் உலகப் புகழ் பெற்ற பொருளாதார மேதையான மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் இயங்கும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் போகுமா? தெரியாமல் போய் விட்டது என்றுதான் அதிகாரபூர்வ அரசு அறிக்கைகள் சொல்கின்றன; அவரும் சொல்கிறார். கறைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரரான மிஸ்டர் உத்தமரான அப்பழுக்கற்ற தூய்மையாளரான திருவாளர் மன்மோகன் சிங்கனார் அவர்கள் தலைமையில் உள்ள அரசாங்கம் இது போன்ற ஒரு விற்பனையில் எந்தவித சந்தேகத்திற்கும், எந்தவித ஊழல்களுக்கும், எந்தவித முரண்பாடுகளுக்கும், எந்தவித லஞ்சங்களுக்கும், எந்தவிதமான சிபாரிசுகளுக்கும் இடமில்லாமல் அரசுக்கு அதிக பட்ச வருமானம் உள்ள வழியைத்தானே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன?

மன்மோகன் சிங் அவர்கள் தலைமையிலான ஊ பி ஏ (ஊழலைப் பின்பற்றும் ஏஜென்ஸி) செய்த ஒரு மாபெரும் அயோக்யத்தனத்தால் இன்று இந்தியாவுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு.

ஸ்பெக்ட்ரம் என்பது ஏன் ஒரு பெரும் விலை மதிப்புள்ள ஒரு வளமாகிறது?
ஸ்பெக்ட்ரம் எனப்படும் கம்பியில்லாத தொலைத் தொடர்பு, வலைப் பின்னல்களுக்கான ஊடகம். அரசாங்கத்தின் கட்டுப்பாடில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அளவுள்ள ஒரு வளம். நீர்வளம், நில வளம், விவசாய வளம், மனித வளம், கனிம வளம், மின் வளம், கடல் வளம், வன வளம், மலை வளம், நதி வளம் போல இதுவும் ஒரு வளம். ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு வளம். இந்தியாவின் வான் வெளி எப்படி கண்ணுக்குத் தெரியாத ஒரு வளமோ அதே போல வான்வெளியில் விரிந்திருக்கும் இந்த அலைப் பரவல்களும் ஒரு வளமே.

இந்த வளத்தை பெற உலக அளவிலும், இந்திய அளவிலும் பெரும் தொலைத் தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்குள் பலத்த போட்டி நிலவுகிறது. ஏன் பலத்த போட்டி? உலகத்திலேயே மிக அதிக அளவு செல் ஃபோன் பேசும் பயனர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள்.

இன்று இந்தியாவில் ஒரு மிகப் பெரிய நடுத்தர வர்க்கம் உருவாகி வருகிறது. அவர்களது வாங்கும் திறனும், சக்தியும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. செல் ஃபோன் பயன்பாடு என்பது இன்று வெறும் நடுத்தரவர்க்கத்தினரால் மட்டும் பயன் படுத்தப் படும் ஒரு சந்தை என்பதையும் தாண்டி கீழ் நடுத்தர மக்களிடம் பரவலாகப் புழங்கும் ஒரு சாதனமாகவும் மாறி வருகிறது. அதன் பயன்பாடும், அது பயன் படுத்தப் படும் விதமும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டும் புதிய பரிமாணங்களை அடைந்தும் வருகிறது.
ஆக இந்தியாவின் பல கோடிக்கணக்கான செல் ஃபோன் பயனர்களும் அவர்களின் பயன்பாடுகளும் அவை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான சந்தையும் உலக அளவில் பெரு நிறுவனங்களைக் கவர்ந்து அவர்கள் அனைவரையும் இந்தியச் சந்தைக்கு இழுத்து வருகிறது.
செல் ஃபோன் என்பது பேசுவதற்கு மட்டுமே பயன்படும் ஒரு தொலைபேசி சாதனமாக மட்டும் இன்று பயன் படுவதில்லை. இணையம், புகைப்படம், பங்கு வர்த்தகம், இணைய வர்த்தகம், பொழுது போக்கு என்று பல்வேறு விதமான செயல் பாடுகளுக்கும் செல்ஃ போன் என்ற ஒரே சாதனம் இன்று பயன் படுத்தப் பட்டு வருகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைக்கு ஒரு ஃபோன் விகிதம் செல்ஃபோன் வைத்திராத இந்தியர்களே கிடையாது என்ற நிலைக்கு இதன் சந்தை பெருத்து வருகிறது.

கிராமங்களில் விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் கூட செல்ஃபோன் பயன் படுத்தி வருகிறார்கள். இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் செல் ஃபோன் கோபுரங்கள் ஊடுருவி வருகின்றன.

செல் ஃபோன் சாதனம், அதில் பேசும் நிமிடங்களுக்கான கட்டணங்கள், அதில் இறக்கப் படும் விளையாட்டு மென்பொருள்கள் மற்றும் இசைகளுக்கான சந்தைகள், அதன் மூலம் செய்யப் படும் விளம்பரத்திற்கான சந்தை, வாங்கப் படும் பொருட்கள், பிற பயன்பாடுகள் என்று செல்ஃபோன் மூலமாக விளையும் உபரி வணிகத்தின் பெருக்கம் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ளவை.
பல கோடிக்கணக்கான செல் ஃபோன் பயனர்கள் இன்று இந்தியாவில் உருவாகி வருகிறார்கள். கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்தும் எந்தவொரு பொருளின் வியாபார மதிப்பும் பல கோடி மதிப்புள்ளவையாகவே இருக்கும்.
இவை அளிக்கும் மிகப் பெரிய உலகளாவிய வர்த்தக வாய்ப்பும் அவை ஏற்படுத்தும் சந்தைகளும் அதனால் விளையும் லாபங்களும் பிரமிக்கத் தக்கவை. ஆகவே இந்த செல்ஃபோன்களுக்குத் தேவைப் படும் அலைவரிசைகளின் உரிமைகளைப் பெறுவதிலும் உலக அளவில் பெரும் போட்டி நிலவி வருகிறது.

ஆக இந்த அலைப் பரவல் வளத்தினை உரிய முறையில் ஏலம் மூலமாக விநியோகித்திருந்தால் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் வரை நிதி ஆதாரத்தைப் நிச்சயமாகப் பெற்றுத் தந்திருக்கும். ஆனால் இது முறைகேடாக, மக்கள் விரோதமாக, அரசுக்குப் பெரும் நஷ்டத்தையும் தனியார்களுக்குப் பெரும் ஊழல் பணத்தையும் பெற்றுத் தரும் விதமாக அமைந்து விட்டது. இந்தியாவில் இதுவரை நடந்த அத்தனை ஊழல்களின் ஒட்டு மொத்த மதிப்பினைக் கூட்டினாலும் அதை விட பல மடங்கு அதிக அளவில் இதில் பொது மக்களாகிய உங்களுக்குச் சேர வேண்டிய பணம் கையாடல் செய்யப் பட்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு முன்னோட்டம்:

ஸ்பெக்ட்ரம் ஊழலை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால் இதன் பின்ணணியில் அமைந்த அரசியல் சூழ்நிலைகளைச் சுருக்கமாகப் பார்த்து விடலாம். 

சென்ற முறை திரு. மன்மோகன் சிங் தலமையில் அரசு அமைந்த பொழுது காங்கிரஸ் கட்சி, திமுக போன்ற உதிரி மாநிலக் கட்சிகளின் தயவிலேயே ஆட்சியைப் பிடித்தது. அப்பொழுது மத்திய அரசின் மிக முக்கியமான துறையான தொலைத் தொடர்புத் துறை மந்திரிப் பதவியை திமுக வின் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான திரு கருணாநிதி தன் மருமகனின் மகனான தயாநிதி மாறனுக்குப் பெற்றுத் தந்தார்.
தயாநிதி சன் டிவி எனப்படும் மாபெரும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். அப்படி ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் முதலாளி ஒருவரிடம் அந்தத் துறையின் மந்திரிப் பதவிப் பொறுப்பும் அளிக்கப் படுவது நேர்மையான ஒரு செயலாக இருக்காது. Conflict of Interest எனப்படும் நியாயமில்லாத ஒரு பதவி வழங்கலாக அது கருதப் பட்டு நியாயப் படி தயாநிதி மாறனுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப் பட்டிருக்கவே கூடாது. ஆனால் நமது மிஸ்டர் க்ளீன் மன்மோகன் சிங் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டணிக் கட்சியின் நிர்ப்பந்தத்தில் அந்தப் பதவியை தயாநிதி மாறனுக்கே அளித்தார்.
மேலும் தயாநிதி மாறனுக்கு எந்தவித அனுபவமும் இல்லாத நிலையில் மூத்த அனுபவம் உள்ள அரசியல்வாதிகளுக்கு அளிக்கப் படும் கேபினட் பொறுப்பு மந்திரி பதவி அளிக்கப் பட்டது பலரது கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது. ஆனால் நேர்மை, நியாயம், விதிமுறைகள், அறவுணர்வு போன்ற லட்சியங்கள் கிஞ்சித்தும் இல்லாத காங்கிரஸ் கட்சி அவற்றையெல்லாம் குப்பையில் வீசி எறிந்து விட்டு மாறனுக்கு முக்கியமான துறையை வழங்கியது. உண்மையில் இந்தத் துறையின் மேல் திமுக கண் வைத்ததன் காரணமே, இந்தத் துறையின் மூலமாகச் சாத்தியப் படும் விநியோகமும் அதன் மூலமாக செய்யக் கூடிய பெரும் ஊழலின் சாத்தியக் கூறுகளுமேயாகும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதை இந்தப் பதவிக்காக அக்கட்சி செய்த பெரும் நிர்ப்பந்தங்களும் பேரங்களுமே நிறுவத் தேவையான சாட்சிகளாக அமைகின்றன.
குடும்ப உறுப்பினரான தயாநிதி மாறனுக்கு முக்கியமான துறையைப் பெற்றுத் தந்து விட்டாலும் கூட அவர்கள் குடும்பத்துக்குள் நடந்த சொத்துத் தகராறுகளின் காரணமாக பாதியிலேயே அவரது பதவி பறிக்கப் பட்டு விட்டது. அந்த நேரத்தில் அது வரையில் சுற்றுச் சூழல் துறை மந்திரியாக இருந்த மற்றொரு திமுக மந்திரியான ஆ.ராஜாவிடம் தொலைத் தொடர்புத் துறை அளிக்கப் பட்டது. அதில் இருந்து இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்ச கட்ட கியருக்கு மாறியது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது எப்படி?
ஆ.ராஜா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் மந்திரியாக இருந்த பொழுதே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. லஞ்சம் வாங்கிக் கொண்டு முறை கேடான கட்டிடங்கள் கட்டுவதற்கு சூழல் துறையின் அனுமதியை அளிக்கிறார் என்பது அவர் மீது பல தரப்புக்களில் இருந்தும் எழுந்த முக்கியக் குற்றசாட்டு.  “தந்திரமும், தரகும் செழித்து வளர்ந்த தலைநகரில் ராஜாவுக்கு புதிய நண்பர்கள் பலர் சுற்றுச் சூழல் துறையில் உருவாகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் வணிகத்தின் அதிபர்கள்” என்றெல்லாம் புலனாய்வுப் பத்திரிக்கைகள் தெரிவித்தன. பிரதமர் ராஜா மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருந்தன.
 

இந்தத் தருணத்தில் தமிழ் நாட்டில் மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தாருக்கும் பெரும் உள்குடும்ப யுத்தம் ஒன்று துவங்கியிருந்தது. 60கள் வரையிலும் கூட பணத்தட்டுப்பாட்டில் தடுமாறிய கருணாநிதி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு இப்போது பல்லாயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டி விடுகிறது. சன் டிவி என்னும் ராட்சச தொலைக்காட்சி நிறுவனம் அவர் குடும்பத்தில் இருந்து கிளைகள் பிரிந்து அசுர வேகத்தில் மாநில, மத்திய அரசுகளில் அவரது கட்சிக்கு இருந்த செல்வாக்கின் மூலம் வளர்கிறது. அதன் பாகப்பிரிவினை யுத்தத்தின் நடுவே அப்பாவி இளைஞர்கள் மூவர் மதுரையில் எரித்துக் கொல்லப் பட, சன் டிவி பாகஸ்தர்களில் ஒருவராகிய தயாநிதி மாறனின் பதவி பறிக்கப் பட்டு, அந்தப் பதவி ஏற்கனவே தலைநகர் டெல்லியில் ஊழல் வித்தகராக மாறிவிட்டிருந்த ஆ.ராஜாவிடம் அளிக்கப் படுகிறது.

ஊடகங்கள் சொல்லும் கதையின்படி, சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாகிய ராஜா தன் ரியல் எஸ்டேட் படை சூழ சஞ்சார் பவன் அலுவலகத்தில் தொலைத் தொடர்பு மந்திரியாகிறார். அவரது தரகர்கள் அனைவரும் புதிய துறைக்கு ராஜாவுடன் சேர்ந்தே இடம் பெயர்கிறார்கள். புதிய துறையில் பணம் கொழிக்கும் வாய்ப்புக்களை இனம் காண்கிறார்கள். வனத்துறையில் சில கோடிகள்தான் கிட்டின, இங்கு ஒரு பெரிய தங்கச் சுரங்கமே ஸ்பெக்ட்ரம் விநியோகத்தின் மூலமாக மறைந்து கிடக்கிறது எனக் கண்டு பிடித்துக் கொடுக்கிறார்கள். புதிய துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விநியோகிக்க வேண்டிய தங்கச் சுரங்கம் இருப்பதைக் கண்டறியும் ராஜா அதை கடத்திச் சென்ற திட்டம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல். தங்கச் சுரங்கத்தை வெட்டிக் கொள்ளையடிக்கும் திட்டம் உருவாகிறது.
அப்படி ஏற்கனவே ராஜாவுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு சக்தி வாய்ந்த இடைத் தரகர்தான் ராஜாவின், ஸ்பெக்ட்ரத்தின், ஏன் இந்தியாவின் தலைவிதியையே தீர்மானிக்கும் சகல வல்லமை படைத்த அதிகார பீடமாக மாறுகிறார் என்று ஹெட்லைன்ஸ் சானல் சொல்லுகிறது. அவரைப் பற்றி பின்னால் பார்க்கலாம். முதலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் எப்படி நடத்தப் பட்டது என்பதை பார்த்து விடலாம்.
ராஜாவின் ஊழல்களா? அல்லது ஊழல்களின் ராஜாவா?
1900ம் ஆண்டு சென்னை போட் கிளப் நிலத்தில் ஒரு கிரவுண்டு என்ன விலையில் விற்றதோ அதே விலையை 2010ல் அதே கிரவுண்டுக்கு யாராவது விற்கத் தீர்மானம் செய்வார்களா? செய்தார் ராஜா ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில்!
2001ம் ஆண்டு வெறும் 40 லட்சம் பேர்களே செல்ஃபோன்கள் பயன் படுத்துபவர்களாக இந்தியாவில் இருந்தார்கள். இந்த செல் ஃபோன் பயனர்களின் எண்ணிக்கையின்படி ஒரு விலை 2001ல் தீர்மானிக்கப் பட்டது.
2001ல் 40 லட்சமாக இருந்த செல்ஃபோன் பயனர்களின் எண்ணிக்கை 2008ல் 30 கோடியாக உயர்ந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. பயனர்கள் அதிகரித்துவிட்ட 2008ம் ஆண்டிற்கான விலை, பல ஆண்டுகள் முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகத்தான் இருக்கும். அப்படி, ஒரு சேவையின் தேவை நூறு மடங்கு அதிகரித்திருக்கும் பொழுது அதன் விலை குறைந்தது ஒரு பத்து மடங்காவது அதிகரித்திருக்க வேண்டும் அல்லவா? அதுதான் நடக்கவில்லை என்று பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. ஏன் நடக்கவில்லை? மேலே படியுங்கள்.
ஸ்பெக்ட்ரம் வரிசைகளை 2008ம் ஆண்டில் விற்க வேண்டிய அடிப்படை விலையாக 2001ல் நிர்ணயத்த குறைந்த விலையையே முடிவு செய்கிறார் ராஜா. டிராய் அமைப்பும், பத்திரிகைகளும், பிரதமர் அலுவலகமும் இந்த குறைந்த விலை நிர்ணயத்தை மாற்றச் சொல்லியும் பிடிவாதமாக அந்தக் குறைந்த விலையே அடிப்படை விலை என்று ராஜா நிர்பந்தித்து விடுகிறார் என்பது ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
அவர்களது கூற்றுப்படி, விலையைக் குறைவாக நிர்ணயித்ததும் அல்லாமல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வரிசைகளை ஏலம் மூலம் விற்பனை செய்யாமல் மிகவும் ரகசியமாக, சந்தேகம் தரும் வகையில், முறையான நெறிமுறைகளைப் பின்பற்றாமல், முறைகேடாக, யாருக்கும் அறிவிக்காமல் பெரிய நிறுவனங்கள் யாரும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்காமல், ராஜாவே இந்த விற்பனையை தனியாக நடத்தி முடித்து விடுகிறார்.
அதாவது ஏலத்திற்கு விடாமல் யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே ஸ்பெக்ட்ரம் என்று அறிவித்து விடுகிறார். ஒரு சில ஊர் பேர் தெரியாத, திடீரென்று முளைத்த, ரியல் எஸ்டேட் கம்பெனிகள்தான் முதலில் வந்தன என்று அறிவித்து விடுகிறார். அந்த சந்தேகத்திற்கு உரிய ரகசியமான கம்பெனிகளுக்கே ஸ்பெக்ட்ரம் எல்லாம் சொந்தம் என்று சொல்லி, முன்கூட்டியே சதித் திட்டம் போட்டு வைத்திருந்த குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரெம் வரிசைகளை விற்று விட்டு, அதற்குப் பின்னால் முறையாக வந்த பெரும் நிறுவனங்கள் அனைத்திற்கும் பெப்பே காட்டி விடுகிறார் ராஜா.
“சரி இதனால் அரசுக்கு என்ன நஷ்டம்? விற்பனைதான் நடந்து விட்டதே? காசுதான் வ்ந்து விட்டதே?” என்று அப்பாவித்தனமாக நீங்கள் யாரேனும் கேட்கலாம். ஒரு சில ஊடகங்கள் கசியவிடும் குற்றச்சாட்டு உண்மையானால், உங்களது புரிதல் ஏன் சரி இல்லை என்பதையும் இப்படி பின்வாசல் வழியாக செய்த விற்பனை மூலமாக அரசுக்கு எப்படி ஒரு பெரும் இழப்பு ஏற்பட்டது என்பதையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1. முதலில் அரசிற்குச் சொந்தமான, தேவை மிக அதிகம் உள்ள ஒரு மாபெரும் வளத்தை, அந்த வளத்தைப் பெற கடும் போட்டிகள் நிறைந்த ஒரு சூழலில், அதன் அடிப்படை விலையைத் தற்கால தேவையைப் பொருத்தே நிர்ணயித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் உள்நோக்கத்துடனும் சதித்திட்டத்துடனும் 2001ல் குறைந்த பயனர்கள் இருந்த சூழலில் தீர்மானிக்கப் பட்ட விலையை நிர்ணயித்தது ராஜாவின் முதல் குற்றம்.
2. இரண்டாவதாக, அப்படியே குறைந்த பட்ச அடிப்படை விலையை நிர்ணயித்திருந்தாலும் கூட கடும் போட்டி நிலவும் சூழலில் அந்த வளங்களை ஏலம் விடுவதின் மூலமாகவே விற்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி ஏலத்திற்கு விட்டிருந்தால் ராஜா விற்ற அடிப்படை விலையை விட பத்திருபது மடங்கு அதிகமாக அவை விலை போயிருக்கும். அரசுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய்கள் வருமானத்தை ஈட்டித் தந்திருக்கும்.
அப்படி ஏலத்திற்கு விடாமல் தான்தோன்றித்தனமாக ரகசியமான முறையில் அனைத்து நிறுவனங்களையும் போட்டி போட விடாமல் முன்னால் வருபவர்களுக்கே விற்பேன் என்று கள்ள ஆட்டம் ஆடி குறைந்த விலைக்கு விற்று அரசுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுத்தியது ராஜாவின் இரண்டாவது குற்றம்.
3. சரி அப்படி குறைந்த விலைக்கு வைத்து அவர் யாருக்கு விற்றிருக்கிறார் என்று பார்த்தால் அங்குதான் அவரது சகுனி வேலைகள் யாவும் அம்பலத்துக்கு வருகின்றன என்பது ஊடகங்கள் சொல்லும் கதை.
முதலில் சில தில்லு முல்லுகள் செய்து முறையாக இந்தத் தொழிலில் இருக்கும் பெரு நிறுவனங்கள் எவையும் விண்ணப்பம் சமர்ப்பிக்காமல் செய்து விடுகிறார். அதாவது விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய நேரம் காலாவதியாகி விட்டது என்று சொல்லி பெரிய நிறுவனங்களை நிராகரித்து விட்டு தனக்கு வேண்டப் பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே விற்று விடுகிறார். அந்த நிறுவனங்கள் எவை என்று பார்த்தால் நமக்கு அடுத்த கடும் அதிர்ச்சி காத்திருக்கிறது.
ராஜா முதலில் விற்பனை செய்த நிறுவனங்கள் இரண்டு - ஸ்வான் என்ற நிறுவனமும், யுனிடெக் என்ற நிறுவனமும். இந்த இரண்டு நிறுவனங்களும் முதலில் தொலைத் தொடர்பு நிறுவனங்களே அல்ல. ரியல் எஸ்டேட் கம்பெனிகள்.
எந்தவிதமான தொலைத் தொடர்பு கட்டுமானங்களிலும் அனுபவம் இல்லாத, முதலீடு செய்யாத நிறுவனங்கள். அவர்கள் ரியல் எஸ்டேட் துறையிலாவது ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் அவைகள் அதிலும் ஈடுபட்டவை அல்ல. புதிதாக இந்த விற்பனையை வாங்குவதற்காகவே திடீரென்று முளைத்த கம்பெனிகள்.
இவை எங்கிருந்து வந்தன? யார் உருவாக்கினார்கள்? இவைகளுக்கும் ராஜாவுக்கும் என்ன சம்பந்தம்? அவற்றிற்கும் கருணாநிதியின் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் “தி பயனீர்”, “ஹெட்லைன்ஸ் டுடே”, “டைம்ஸ் நௌ” போன்ற ஊடகங்கள் தருகின்றன. அவர்கள் சொல்லும் தகவல்களின்படி இந்த ஊழல் மிகுந்த எச்சரிக்கையுடன், நேரடியாகக் குற்றம் சாட்ட முடியாதபடி வடிவமைக்கப் பட்டுள்ளது.  அவர்கள் அப்படி என்னதான் சொல்லுகிறார்கள் ?
ஊர் பேர் தெரியாத இரு கட்டிட வணிக நிறுவனங்களுக்கு கடும் தொழில்நுட்ப அனுபவமும் அறிவும் தேவைப் படும் ஒரு புதிய தொழில்நுட்ப வளம் அடிமாட்டு விலைக்கு விற்கப் படுகிறது. ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்ற கதையாக,  கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இந்த வளம் விற்கப் பட்டிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் போன்ற ஒரு உயர் தொழில்நுட்பம் கோரும் வளத்தை சம்பந்தமேயில்லாமல் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு எதற்காக விற்க வேண்டும்?
ஏன் 2008ல் 2001ல் இருந்த விலை வைத்து விற்கப் பட வேண்டும்?
ஏன் தொலைத் தொடர்பிலும் செல்ஃபோன் தொழிலிலும் பழம் தின்று கொட்டை போட்ட உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் எதுவும் இந்த விற்பனையில் கலந்து கொள்ள முடியாமல் துரத்தி அடிக்கப் பட்டன?
ஏன் முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று விற்பனை உத்தி மாற்றப் பட்டது? இது என்ன பள்ளிக்கூடத்தில் வைக்கப் படும் ஓட்டப் பந்தயமா?
ஒரு சில ஊடகங்கள் எழுப்பும் மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒவ்வொன்றாக அதே ஊடகங்கள் தரும் பதிலைக் காணும் பொழுது இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலின் முழு மர்மங்களும் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பித்து, இதில் யார் யார் பங்குதாரர்கள்? யார் யார் கூட்டாளிகள்? யார் யார் குற்றவாளிகள்? என்பவை தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும். அவற்றை ஒவ்வொன்றாக விடுவித்து இந்த உலக மகா ஊழலின் புதிரை விடுவிக்கலாம். சற்று பொறுமையாகவும் ஆழமாகவும் இவற்றைப் படித்து உள்வாங்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்.
இந்த ஊழல் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பெரும் அளவில் பாதிக்கக் கூடியது.

(தொடரும்)




 

Monday, November 15, 2010

மண்டேனா ஒன்று -போலியதானே நம்புறீங்க தமிழ் உடன்பிறப்புகளே அதனாலதான்

ஒவ்வொரு தீபாவளி தினத்தன்றும், தினசரிகள், ஆட்சியிலிருக்கும் தலைவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்திகளைப் பிரசுரிக்கும். இந்த தீபாவளிக்கும், இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் சோனியா காந்தி, மற்றும் ஜெயலலிதா உட்பட தமிழகத்தின் பல அரசியல் தலைவர்கள் மக்களுக்கு "இத்தினத்தில் மக்களது வாழ்வில் ஒளி பிறக்கட்டும்" என்ற ரீதியில் வாழ்த்துச் செய்திகளை விடுத்திருந்தனர்.

இந்த மரபை குறிப்பிடத்தகுந்த அளவில் தவிர்த்தவர் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள். பெரியார் ஈ.வே.ராமசாமியால் போஷிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பகுத்தறிவாளர் என்று தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் இவர், கடவுளரும், சாத்தானும் தொடர்புடைய தீபாவளிக்கு வாழ்த்துக் கூறுவதைத் தவிர்த்தது சித்தாந்த ரீதியாக அவரைப் பொறுத்தவரை மிகவும் சரியானதே. ஆனால் கருணாநிதி ஒரு சந்தர்ப்பவாத பகுத்தறிவாளர். ரமலான், கிறிஸ்த்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு அவர் வாழ்த்துக்கள் வெளியிடுவதிலிருந்து தவறுவதே இல்லை.

இஸ்லாமியர்கள் அணியும் தலைக் குல்லாயை அணிந்து, இஃப்தார் விருந்துகளில் கலந்து கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது மகளும், கவிஞரும், நாத்திகம் மற்றும் பெண்ணியம் போன்றவற்றின் மீது புரட்சிகர சிந்தனைகளை உடையவருமான கனிமொழி ஒரு இஃப்தார் விருந்தில், தலையை முழுவதும் மறைக்கும் விதமான பாரம்பரிய உடையுடன் கலந்து கொண்டார்.

ஆனால் கருணாநிதியின் சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதம், அவருடைய குருநாதர் பெரியாரைப் போலல்லாமல் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டுமே சாடும் தன்மையை உடையது. ஒருமுறை கருணாநிதி தம்முடைய கட்சி சகா ஆதி ராஜாராம் நெற்றித் திலகம் அணிந்ததற்காக அவரைக் கடிந்து கொண்டதோடு, அது ரத்தம் வடிவது போலுள்ளது எனவும் கேலி செய்தார். தவிர கூட்டணியில் இல்லாத வேளைகளில் கருணாநிதி அறிவிக்கப்பட்ட ஹிந்துத்துவக் கட்சியான பாஜகவை பண்டாரப் பரதேசிகள் என்றும் வர்ணிப்பார்.

ஆனால் அவருடைய குடும்பம் எப்போதும் அவருடைய பகுத்தறிவுப் பிரசாரங்களிலிருந்து விலகியே நிற்கிறது. அவருடைய குடும்ப உறுப்பினர்களில் சிலர் மத நம்பிக்கையுடையவர்கள். அவருடைய மருமகளும், மு.க.ஸ்டாலினினுடைய மனைவியுமான துர்கா, ஒருமுறை தன்னுடைய சேகரிப்பில் இருக்கும் விநாயகர் விக்ரகங்களை ஒரு பிரபல தமிழ் பத்திரிகைக்கு பெருமிதத்துடன் காட்சிப்படுத்தினார். சில மாதங்களுக்கு முன்பு, மைலாப்பூரில் உள்ள முண்டக்கண்ணியம்மன் கோவிலில் ஒரு புதிய உணவு அரங்கத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். கருணாநிதியின் பேத்தியான எழிலரசி அவரது மகள் செல்வியின் மூலமாக ஒரு கோவில் கட்டுவதற்காக ரூபாய் பதிமூன்று லட்சத்தை சமீபத்தில் நன்கொடையாக அளித்தார். கருணாநிதியின் அதிகாரப்பூர்வ மனைவியான தாயாளு அம்மாள், புட்டப்பர்த்தி சாய்பாபாவின் பக்தை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் அரசாங்க விழா ஒன்றை நடத்தும் பாவனையில், சாய்பாபா சென்னைக்குத் தருவிக்கப்பட்டு, சாய்பாபா கருணாநிதியின் இல்லத்திற்கு தனிப்பட்ட வருகை தந்ததோடு மட்டுமல்லாமல், தயாளு அம்மாள் சாய்பாபாவின் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.

கருணாநிதியினுடைய அக்காள் பேரன் கலாநிதி மாறன், மற்றும் பேரன்களான உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி ஆகியோர் படத் தயாரிப்பில் மும்முரமாக இருக்கின்றனர். இவர்களுடைய படங்கள் அனைத்துமே பிராமண பூஜாரிகளின் பூஜைக்குப் பிறகே துவங்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த குடும்பமுமே இறை நம்பிக்கையாளர்கள் என்ற பட்சத்தில் கருணாநிதி மற்றும் தனித்து நிற்கிறாரா? அப்படித் தெரிந்தாலும், அதுவல்ல நிஜம். கருணாநிதியும் அவருடைய மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர்தான். சில வருடங்களாக அவர் அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மஞ்சள் துண்டு - அவருடைய நன்மையை முன்னிட்டு அவருடைய குடும்ப ஜோதிடர்களால் அறிவுறுத்தப்பட்ட நிறம் என்று பரவலாக அடிபடுகிறது. மிக சமீபத்தில் தஞ்சை கோவிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு அதற்கு வருகை தந்த கருணாநிதி பிரதான நுழைவு வாயிலைத் தவிர்த்து பக்கவாட்டு நுழைவு வாயிலின் மூலமாகவே கோவிலை அடைந்தார். கோவிலின் பிரதான நுழைவு வாயிலின் மூலமாக வருகை தரும் அரசியல் தலைவர்களது அரசியல் வாழ்வு வீழ்ச்சி பெறும் என்ற நம்பிக்கையை முன்னிட்டே இம்முடிவு. தவிர, தீய சக்திகளின் திருஷ்டியிலிருந்து தப்புவதற்காக, பட்டுசட்டை, வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்தார்.

கருணாநிதி அரசாங்க கட்டிடங்களையும், திட்டங்களையும் கூட அத்திட்டப் பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே சுப தினங்களில் திறந்து வைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடம், முழுமையான கட்டுமானப் பணிகள் முடிவடைவதற்கும் முன்பாகவே பல் கோடி ரூபாய் செலவிலான சினிமா செட்டிங்குகளில் பயன்படுத்தப்படக் கூடிய போலியான மேற்கூரையுடன் மிகுந்த துரித கதியில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் நான்கு மாதங்களுக்குப் பிறகும், தலைமைச் செயலகம் பழைய கட்டிடத்திலிருந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோட்டூர்புரம் நூலகமும் பணிகள் முடிவடைவதற்கு முன்னதாகவே திறந்து வைக்கப்பட்டது.

இருந்தாலும், கருணாநிதி தீபாவளி வாழ்த்துக் கூறுவதிலிருந்து சற்று தள்ளியே இருக்கிறார். அவரைப் பொருத்தவரை தீபாவளி கொண்டாட்டம் என்பது திராவிட தீய சக்திகளுக்கு எதிரான ஆரியக் கடவுளரின் வெற்றி என்று கருதப்படுகிறது. ஆனால் குறிப்பிடத்தகுந்த தமிழ் எழுத்தாளரான ஜெயமோகனைப் பொருத்தவரை, தீபாவளி என்பது திராவிடர்கள் (திசம்பர் மாதத்தில்) கொண்டாடும் கார்த்திகை தீபத்திருநாளின் மூலமே என்றும், பிறகு புத்தர்களால் அது வடவர்களின் பண்டிகையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.

முதல்வரின் சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதம் ஒருபுறமிருக்க, அவருடைய குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி தீபாவளி கொண்டாடக் கூச்சப்படவில்லை. விளம்பரதாரர்கள் மூலமாகக் கிடைக்கும் கணிசமான தொகையை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

இப்பொழுதாவது கருணாநிதி தனது சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதத்தை விட்டொழித்து, அனைத்து மதத்தவரின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும், அல்லது அவருடைய குருநாதர் பெரியாரைப் போல அனைத்து மத நிகழ்ச்சிகளிலிருந்தும் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் இவை நடக்கமலேயே போகலாம்....இப்பொழுது துவங்கியே சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான சுப தினங்கள் கணிக்கப்படுகின்றன.

Thursday, November 11, 2010

காமன்வெல்த் & ஸ்பெக்ட்ரம்

இந்தியர்களை இந்த அரசியல்வாதிகள் மடையர்கள் என்று நினைத்து விட்டார்கள்.அதனால் தான் ஊழல் செய்தவர்களை ராஜினாமா மட்டும் செய்ய வைத்தல் போதுமா? அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஜெயிலில் போட வேண்டும் .அப்போதுதான் இந்த ஜனநாயகம் நிலைத்து நிற்கும்.காமன்வெல்த்  வில்லன்  சுரேஷ் கல்மாடி பல லட்சங்களை சுருட்டிக்கொண்டார் அவரும் தற்போது ராஜினாமா  ஸ்பெக்ட்ரம்  வில்லன் ராசா  அவரும் விரைவில் ராஜினாமா தானாம் !  அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா ஆனால்  என்ன அவர்களுக்கு பெரிய இழப்பு ஒன்னும் இல்லையே ! சராசரி மனிதனுக்கு தானே இழப்பு, இவர்கள் இந்த பிரச்சினை முடிந்ததும் எதாவது ஒரு நாட்டுக்கு இன்ப சுற்றலா சென்று விடுவார்கள்.இந்த இழப்பு உனக்கும் எனக்கும் தானே இந்தியனே!

எந்திரன் - 2

எந்திரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயா பிக்சர்ஸ் நிறுவனமான கிரீன் லிட்டில் மூவீஸ் எந்திரன் - 2 என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

எந்திரன் படத்தின் கடைசிக் காட்சி நினைவு இருக்கும்... மியூசியத்தில் எந்திரன் அக்கு வேறு ஆணி வேறாக இருக்கும்.. இரண்டாம் பாகம் அதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.

அந்த மியூசியத்துக்கு தாடி வைத்துக்கொண்டு ஒரு பெரியவர் வருகிறார், அவருக்கு உதவியாளராக இன்னொருவர். பார்க்க அறிஞர் மாதிரி இருக்கிறார். இவர்கள் இருவரும் சும்மா இல்லாமல் கூட்டம் இல்லாத மியூசியத்தில் எந்திரனை திரும்பவும் சேர்க்கிறார்கள். எந்திரன் உயிர்பெற்று விடுகிறது.

ஆண்டு - கிபி 2023

உயிர் பெற்ற எந்திரன் பேசத் தொடங்குகிறது "13 ஆண்டுகள் என்னை ஒதுக்கிவிட்டீர்கள். இந்த தண்டனை எனக்கு போதாதா? நான் என்ன செய்தேன்? பாயசம் சாப்பிடும் போது புறங்கையைத்தானே நக்கினேன்...."

பெரியவருக்கும் அறிஞருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். இந்த எந்திரனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, ஒரு ஐந்து எழுத்து பெயர் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் ஐந்து எழுத்தில் பெயர் வைத்தால் தமிழக மக்கள் குழம்புவார்கள் அதனால் நான்கு எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். எந்திரனிடம் பேச்சுக் கொடுக்கிறார்கள்.

"உனக்கு என்ன எல்லாம் தெரியும்?"

"எனக்குக் கவிதை எழுதத் தெரியும்"

"அட அப்படியா? ஒரு கவிதை சொல்லு பார்க்கலாம்"

"தமிழர்களே
தமிழர்களே
நிங்கள் என்னை
நட்டு போல்டாக கழட்டி போட்டாலும்
பேரிச்சம் பழமாக தான் ஆவேன்
அதை என் குடும்பத்தினர் எல்லோரும் சாப்பிடலாம்."


பெரியவரும், அறிஞரும் இது எப்படிக் கவிதையாகும் என்று குழம்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.

"வேற என்ன தெரியும்?"

"கடிதம் எழுதுவேன்"

அப்பறம்?

"சினிமா படத்துக்கு வசனம் எழுதுவேன்"

"ம்"

"ஏதாவது மானும் மயிலும் ஆடும் நிகழ்ச்சிக்கு அழைத்துக்கொண்டு போனால் நான்குமணி நேரம் ஆனாலும்கூட சோர்ந்துபோகாமல் நடனத்தை மட்டுமே பார்ப்பேன்.

"ஓ! இன்னொரு கேள்வி..."

"நீங்கள் கேள்வியே கேட்க வேண்டாம், நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லுவேன்!"

இதற்குமேல் பெரியவரும் அறிஞரும் வாயடைத்து, "உனக்கு பல கலைகள் தெரிந்திருக்கிறது. அதனால் உன்னை "கலைஞர்" என்று அழைக்க போகிறோம்," என்று சொல்ல எந்திரன் குஷியாகிறது.

"உங்களை நான் எப்படி அழைக்க வேண்டும்?" என்று எந்திரன் கேட்டது.

"நீயே முடிவு செய்" என்றார் பெரியவர்.

"எனக்கு நீங்கள்தான் திரும்பவும் உயிர் கொடுத்தீர்கள். அதனால் நீங்கள்தான் என் கடவுள்!"

பெரியவர் கோபமாக, "ஏய் காட்டுமிராண்டி! நானே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீ என்னையே கடவுள் என்று சொல்லுகிறாய். என்ன தைரியம் உனக்கு? ..." என்று கத்த தொடங்கினார்.

கலைஞர் உடனே தன் டேட்டாபேஸில் அலச, கடவுள் என்றால் மற்றொரு வார்த்தை -தெய்வம்... அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.. என்று ப்ளாஷ் அடிக்கிறது. பிதா என்றால் தந்தை என்றும் ஒளிர்கிறது.

"நீங்கள் என் தந்தை மாதிரி, பெரியவராகவும் இருப்பதால் நீங்க "தந்தை பெரியார்" என்று அழைக்கிறது.

பக்கத்தில் இருக்கும் அறிஞர், "அவர் எனக்குதான் முதலிலிருந்தே தந்தை," என்று சண்டைக்கு வருகிறார்.

"அப்படியென்றால் நீங்கள் எனக்கு மூத்தவர். அதனால் உங்களை அறிஞர் அண்ணா என்று கூப்பிட போகிறேன்."

கலைஞர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் - மூவரும் எலக்டரிக் டிரெயினில் ஏறுகிறார்கள்.

இவர்கள் ஏறிய பெட்டியில் ஓர் இளைஞர் குமுதம் படித்துக்கொண்டு இருக்கிறார். அதன் அட்டையில் எந்திரன் படம் இருப்பதை பார்த்து எந்திரன் குஷியாகிறது. அந்தப் புத்தகத்தை வாங்கி ஒரு நொடி கண்ணுக்குநேராகப் பிடித்துவிட்டு திருப்பித் தருகிறது.

புத்தகம் கொடுத்தவர், "அதற்குள் படித்துவிட்டீர்களா?"

"படிப்பதற்கு என்ன இருக்கிறது? குமுதத்தில் வெறும் படம்தானே. அதனால் உடனே பார்த்துவிட்டேன்" என்கிறது.

பக்கத்தில் ஒரு கணக்கு வாத்தியார் கால்குலேட்டரை வைத்து ஏதோ தட்டிக்கொண்டிருக்கிறார். எந்திரன் என்ன என்று கேட்க, அவர் 1.7லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரியவில்லை என்று சொல்ல எந்திரன் டக் என்று விடை சொல்லுகிறது. இதில் எத்தனை கிலோ ஒரு ரூபாய் அரிசி வாங்கலாம், எத்தனை கிராம் மளிகைப்பொருள்கள் வாங்கலாம் என்றெல்லாம் விஜய்காந்த் மாதிரி புள்ளிவிவரம் சொல்லுவதை பார்த்து எதிர்சீட்டில் இருக்கும் இளைஞர் ஆர்வமாகக் கிட்டே வருகிறார்.

அப்போது அந்த இளைஞரைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ். கோஷ்டி ஒன்று வம்பு செய்ய உடனே எந்திரன் அவர்களை வாய்க்கு வந்தபடி தூவேஷிக்கிறது. அந்த கோஷ்டி அடுத்த ஸ்டேஷனில் இறங்கிப் போய்விடுகிறார்கள்.

"உன் பெயர் என்ன?" என்று எந்திரன் கேட்கிறது.

அதற்கு அந்த இளைஞர், "எனக்கு வேலை எதுவும் இல்லை, சும்மா ஊர்சுற்றுகிறேன். அரேபிய மொழியில் ராகுல் என்றால் ஊர்சுற்றுபவர் என்று பெயர். அதனால் என்னை எல்லோரும் ராகுல் என்று அழைப்பார்கள். பணம், பதவி என்று நிறைய இருந்தாலும், ஒரு ஜாலிக்கு ரயிலில் சுற்றுவேன், பிட்டுக்கு மண் சுமப்பேன்..குடிசையில் டீ குடிப்பேன்." என்று அடுக்கிக்கொண்டே போகிறார். "என்னை அந்தக் கும்பலிடமிருந்து காப்பாற்றியதற்கு நன்றி. பதிலுக்கு உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?" என்றும் விசாரிக்கிறார்.

எந்திரன் சற்றும் யோசிக்காமல், "என்னிடம் 2G ஃபோன் தான் இருக்கிறது. எனக்கு இப்போது லேடஸ்டாக 3G ஃபோன் வேண்டும்," என்று கேட்கிறது.

உஷாரான இளைஞர், "என் அம்மாவிடம் கேட்டுச் சொல்லுகிறேன்" என்று கூறி அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்பதற்கு முன்பாகவே இறங்கி தலைதெறிக்க ஓடுகிறார்.

எந்திரனுக்கு உலக அறிவு, ஞானம் எல்லாவற்றையும் பகுத்தறியச் சொல்லிதர முடிவுசெய்து பெரியவரும் அறிஞரும் அறிவாலயத்துக்கு அப்டேட் செய்ய அழைத்து போகிறார்கள். அங்கே சந்தானம், கருணாஸ் போல மணிமணியாய் இரண்டு 'வீர' இளைஞர்கள் அவருக்கு ஸ்பீச் பிராக்டிஸ் கொடுக்கிறார்கள். அவர்களுடைய பயிற்சி எப்படி இருக்கிறது, "தமிழ் காட்டுமிராண்டி பாஷை, கடவுளை நம்பாதே, பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாப்பானைக் கொல்லு" என்றெல்லாம் சரியாகச் சொல்கிறதா என்று சோதிக்க வந்த பெரியவரைப் பார்த்து எந்திரன், "தமிழன் மரமண்டை, சோற்றாலடித்த பிண்டம்..." என்று அடுக்குகிறது. பெரியவரும், அறிஞரும் காமெடி உருப்படிகளைக் கண்டிக்கிறார்கள். காமெடி உருப்படிகள் எந்திரனோடு சேர்வதா சேற்றைவாரி அடிப்பதா என்ற குழப்பத்திலேயே மீதி நாள்களைக் கழிக்கிறார்கள்.

வில்லனாக வரும் கேரக்டர் பெரியவரிடம் இருக்கும் கருப்பு பெட்டியில் இருக்கும் சிகப்பு டிஸ்கை எடுத்து எந்திரனுள் போட, கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு கரகரத்த குரல் என்று எந்திரன் அடுத்த வெர்ஷன், புதிய கெட்டப்புடன் எழுந்து வருகிறது.

இதற்குள் அறிஞர் வேறு ஒரு ரோபோவை தயாரிக்க அதுவும் கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பி கெட்டபுடன் வருகிறது...

இதற்கு பிறகு படம் குடும்ப படமாகிறது. அதாவது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் !


அது பாகம் 3 - இதை பற்றி வாசகர்கள் எழுதலாம். !

சூடு பிடிக்கும் அரசியல்

இன்று கோடநாடு புறப்படுவதற்கு முன் ஜெயலலிதா டைம்ஸ் செய்தி சேனலுக்கு இந்த பேட்டியை அளித்துள்ளார்.
அதில்

2ஜி ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பான விவகாரத்தில், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ஆ. ராசாவை நீக்க வேண்டும். அவ்வாறு அவரை நீக்கினால் கூட்டணி அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்ளும் என்று காங்கிரஸ் கருதுவது இயற்கையே. அத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவு தரும்."

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தருவதற்காக தான் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், பொது வாழ்க்கையில் தூய்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மக்களவையில் உள்ள 9 அதிமுக எம்.பி.,க்கள் மற்றும் ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 18 எம்.பி.,க்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முழு பேட்டியை இங்கே படிக்கலாம்

இன்று அல்லது நாளை கலைஞர் மன்மோகன் சிங்கிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராசா விவகாரம் மூலம் திமுகவை களங்கப்படுத்த முயற்சி என்று சில மணி நேரம் முன்பு கி. வீரமணி சொல்லியிருக்கார்.

Wednesday, November 10, 2010

நச் பூமராங் !

1. ஜி20: பிரதமர் நேற்று கொரியா பயணம்.
வந்தவுடனாவது 2ஜி- க்கு ஒரு முடிவு சொல்வாரா?

2. ராசாவை பதவி நீக்கக்கோரி ஜனாதிபதிக்கு இந்தியர்கள் தந்தி அனுப்பவேண்டும்:ஜெ
இவங்க எப்ப கலைஞர் கட்சில சேர்ந்தாங்க? அப்டி ஒரு வேளை அனுப்பினா அன்றைய தினத்தந்தி சர்குலேஷன் கூடுமா?.


3. லக்ஷ்மன் இன்னும் ஒரு மேட்ச்சைக் காப்பாற்றினார் - செய்தி.
ராமருக்குக் கோவில் கட்டினாத்தான் அடிக்க வாராங்க! லக்ஷமனுக்குக் கட்டி
ராமர் செலைய உள்ள வெக்கலாமுல்ல?


4. ஊழல் புகார்களில் சிக்கிய அசோக் சவான் மற்றும் சுரேஷ் கல்மாடி
ஆகியோர் மீது, காங்கிரஸ் மேலிடம் அதிரடி நடவடிக்கை.
ஒருவர் மாடி வீடு. இன்னொருவர் கல்மாடி.


5. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள், ஆதாரத்துடன்
நிரூபித்தால் பதவி விலக தயார்" என என துணை முதல்வர் ஸ்டாலின்
கோபமாகக் கூறினார்.
எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது எந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம்
எழுதபோகிறேன் என்று கிளம்பாமல் இருந்தாரே.( நன்றி: இதற்கு )


6. தீப்பிடிப்பது உள்ளிட்ட பிரச்சனைக்குரிய நானோ கார்களை தி்ரும்பப் பெறப்போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
முன்னாடியே தெரிஞ்சு இருந்தா நெறைய மாமியார்கள் மருமகளுக்கு இதை
புக் செய்திருப்பார்கள்.

7. தீபாவளிக்கு மதுபான விற்பனையை, 300 கோடி ரூபாய். - செய்தி
ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ் !

8. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து, ஜனவரி 14ம் தேதிக்குப் பிறகு தான்
எதையும் உறுதியாகக் கூற முடியும் - ராமதாஸ்
பொங்கலில் ஜாதிக்காய்-சிறிது அளவு ஏன் போடுகிறார்கள் என்று இப்போது புரிந்திருக்கும்.


9. உங்க வீட்டுக்கு ஆற்காட்டார் வந்தால் என்ன போகும் ?
கரண்ட் :-)


பிகு: படம் - நச் என்று இச் வைப்பது பற்றிய பூமராங் படம் :-)

பள்ளிக்குழந்தைகளை கடத்திச் கொன்ற கொடூரன் சுட்டுக் கொலை

கோவை  : கோவையில், பள்ளிக்குழந்தைகள் இருவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி மோகனகிருஷ்ணன், போலீஸ் "என்கவுன்டரில்' நேற்று சுட்டுக் கொல்லப்பட்டான். விசாரணைக்காக வேனில் அழைத்துச் சென்றபோது போலீசிடம் இருந்த துப்பாக்கியை பறித்து அவன் சுட, பதிலுக்கு போலீஸ் அதிகாரிகள் சுட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானான்.
கோவை, ரங்கேகவுடர் வீதி, காத்தான் செட்டி வீதியில் வசிப்பவர் ரஞ்சித்குமார்(40); துணிக்கடை உரிமையாளர். இவரது மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர், நகரிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். கடந்த மாதம் 29ம் தேதி காலை வாடகை வேனில் பள்ளிக்குச் செல்ல வீட்டருகே காத்திருந்தனர். அப்போது, கால்டாக்சியில் வந்து இவ்விரு குழந்தைகளையும் உடுமலை அருகேயுள்ள தீபாலப்பட்டிக்கு கடத்திய நபர்கள், சிறுமி முஸ்கனை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின், குழந்தைகள் இருவரையும் அங்குள்ள பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரில் தள்ளி கொலை செய்தனர்.தமிழக மக்களை அதிரவைத்த இக்கொலை வழக்கில் பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் மோகன் (எ) மோகனகிருஷ்ணன்(37), இவனது கூட்டாளியான டிராக்டர் டிரைவர் மனோகரன்(23) ஆகியோரை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். நவ., 30க்குள் இவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் முனைப்பில் புலன்விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சமீபத்தில் குற்றவாளிகள் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டியிருந்ததால், நான்கு நாள் "போலீஸ் கஸ்டடிக்கு' அனுமதி கோரி நேற்று முன்தினம்  கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மூன்று நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் கோபிநாத் அனுமதித்தார்.குற்றவாளிகள் மோகன் (எ) மோகனகிருஷ்ணன், மனோகரன் இருவரையும் நேற்று முன்தினம் இரவு கஸ்டடியில் எடுத்த மாநகர போலீசார், சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு இவர்களை நேரில் அழைத்துச் சென்று, "சம்பவம் நடந்தது எப்படி?' என, விசாரிக்க திட்டமிட்ட போலீசார், நேற்று அதிகாலை 5 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து உடுமலை நோக்கி அழைத்துச் சென்றனர்.மோகனகிருஷ்ணனை ஒரு வேனிலும், மனோகரனை மற்றொரு வேனிலும் அழைத்துச் சென்றனர். மோகனகிருஷ்ணன் இருந்த வேனில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்.ஐ.,க்கள் முத்துமாலை, ஜோதி இருந்தனர். மனோகரன் இருந்த வேனில், இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையிலான போலீசார் இருந்தனர்.

இவ்விரு வேனும் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சென்ற போது, ஈச்சனாரி ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இதனால், மாற்றுப்பாதையான போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டில் அழைத்துச் சென்றனர். மனோகரன் இருந்த வேன் முன்னால் செல்ல, மோகனகிருஷ்ணன் இருந்த வேன் பின் சென்று கொண்டிருந்தது.அங்குள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கு அருகே சென்றபோது, மோகனகிருஷ்ணன் திடீரென எஸ்.ஐ., ஜோதியிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறித்து, வேன் டிரைவர் ஏட்டு அண்ணாதுரையை நோக்கி நீட்டி, "வேனை கேரளாவுக்கு ஓட்டிச்செல்...' என மிரட்ட,  உடனிருந்த அதிகாரிகள் திடுக்கிட்டனர்.

நிலைமையை சமாளிக்க எஸ்.ஐ., முத்துமாலை தனது கைத்துப்பாக்கியை எடுக்க முயன்ற போது, மோகனகிருஷ்ணன் சரமாரியாக சுட்டான். ஒரு குண்டு எஸ்.ஐ., முத்துமாலையின் வயிற்றிலும், மற்றொரு குண்டு ஜோதியின் இடது கையிலும் பாய்ந்தது. போலீசார் நிலைகுலைந்ததை தொடர்ந்து, அவன் தப்பியோட முயன்றான். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்.ஐ., முத்துமாலை ஆகியோர் சுதாரித்து துப்பாக்கியால் பதிலுக்கு சுட்டதில் மோகனகிருஷ்ணனின் நெற்றியில் இரு குண்டுகளும், மார்பில் ஒரு குண்டும் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். குண்டு பாய்ந்து காயமடைந்த எஸ்.ஐ.,கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர், கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்களை, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு, சிகிச்சை விவரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். போலீசாரின் அதிரடியான இந்த, "என்கவுன்டர்' கோவை போலீசார் மற்றும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் நடவடிக்கையை பாராட்டும் விதமாக ரங்கேகவுடர் வீதி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ஜெயின் சமூகத்தினர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். அதே வேளையில், போலீஸ் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இரு பிரிவு வக்கீல்கள், கோர்ட் வளாகத்தில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எதிர்ப்பு தெரிவித்த வக்கீல்களுக்கு கண்டனம் தெரிவித்து, கோர்ட் முன் பொதுமக்கள் சிலரும் திரண்டு கோஷமிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மற்றொரு குற்றவாளியான மனோகரனிடம், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

11 ஆண்டுக்கு பின் 2வது "என்கவுன்டர்' : கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் போது, திருமால் வீதியிலுள்ள தனியார் கட்டடத்தில் வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு அதிரடியாக நுழைந்து சோதனையிட முயன்ற போலீசார் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன.எஸ்.ஐ., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும், உள்ளே பதுக்கி வைத்திருந்த குண்டுகள் வெடித்ததிலும் ஐந்து பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு பின் 2001, ஆக., 29ல் ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோட்டிலுள்ள தொழிலதிபர் வீட்டில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நடந்தது.அவ்வீட்டில் இரவில் புகுந்து பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க, அப்போதைய எஸ்.ஐ., பாலமுருகன் (தற்போது இன்ஸ்பெக்டர்) துப்பாக்கியால் சுட்டார். இதில், கொள்ளையன் கண்ணப்பன் என்பவனது காலில் குண்டு பாய்ந்து, சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்தான்.கடந்த 1998க்கு பின் கோவை நகரில் 11 ஆண்டுகளாக போலீஸ், "என்கவுன்டர்' நடக்கவில்லை. நீண்டகாலத்துக்கு பின் நேற்று நடந்த, "என்கவுன்டரில்', குழந்தைகள் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகனகிருஷ்ணன் சுட்டு கொல்லப்பட்டுள்ளான்.

"என்கவுன்டர்' வழக்கு பதிவு : கொலை வழக்கு குற்றவாளி மோகனகிருஷ்ணன், "என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக, போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாருடன் வேனை கடத்த முயன்றது, போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.போலீஸ் கஸ்டடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து, குற்றவாளி உயிரிழந்துள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மரணபீதியில் மனோகரன் : மோகனகிருஷ்ணன், "என்கவுன்டரில்' போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயம், அவனது கூட்டாளி மனோகரனுக்கு வெகுநேரம் வரை தெரியவில்லை. காரணம், முன்னதாக வேறு ஒரு வேனில் அழைத்துச் செல்லப்பட்டான். "என்கவுன்டர்' சம்பவத்துக்கு பின், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தான். போலீசார் பரபரப்புடன் இருப்பதை கண்ட மனோகரன், "என்ன நடந்தது?' என, அருகிலிருந்த அதிகாரிகளிடம் விசாரித்துள்ளான்.மோகனகிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தெரிவித்ததும், மரணபீதியில் உறைந்து அப்படியே தரையில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதுள்ளான். துப்பாக்கியுடன் தன்னை சுற்றி நின்றிருந்த போலீசாரை பார்த்து அடிக்கடி கையெடுத்து கும்பிட்டவாறே இருந்ததாக, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரேதத்தை பெற மனைவி வருவாரா? போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொலை குற்றவாளி மோகனகிருஷ்ணனின் உடல், கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கஸ்டடியில் இவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவனது மனைவி ஆரோக்கியமேரி கோவையில் இல்லை. கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, குழந்தையை சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அங்கு தனியாக வசிக்கும் அவர், கணவனின் உடலை வாங்க வருவாரா, என்பது தெரியவில்லை.

மேலும் இருவர் பிடிபடுவர்? பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை பிடிக்க தனிப்படை தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளது. குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு திட்டம் வகுத்துக் கொடுத்ததாக கூறப்படும், தற்போது தலைமறைவாக உள்ள மேலும் இரு டிரைவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடுகின்றனர். ஒரு சில நாட்களில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபாஷ் போலீஸ்! கொலை குற்றவாளி மோகனகிருஷ்ணன் துப்பாக்கியால் சுட்டதில், எஸ்.ஐ., முத்துமாலையின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதைதொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட அண்ணாதுரை மற்ற இரு அதிகாரிகளையும் காப்பாற்ற, தனது கைத்துப்பாக்கியால் மோகனகிருஷ்ணனை நோக்கி சுட்டுள்ளார். அவனது நெற்றியில் இரு குண்டுகள் பாய்ந்து பலியாகியுள்ளான். எஸ்.ஐ., முத்துமாலை, தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காவிடில், மற்ற இரு போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்கின்றனர், போலீசார்.கொலைக்குற்றவாளி மோகனகிருஷ்ணன் செட்டிபாளையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் மாலை வரை முகாமிட்டு, நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். மோகனகிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் வேனின் இருக்கைகளிலும், வெளிப் புறத்திலும் ரத்தம் வழிந்தோடி படிந்திருந்தது; மேற்கூரையில் குண்டு பாய்ந்ததற்கான துவாரங்கள் காணப் பட்டன. உடனடியாக அந்த வேன், கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டது.மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் வெளியானதும், போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட, தமிழக போலீஸ் உயரதிகாரிகள் விபரங்களை கேட்டறிந்தனர். பொதுமக்களும் போலீஸ் கமிஷனரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். கோவை ஸ்டேட் பாங்க் ரோட்டிலிருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர்கள், கமிஷனருக்கு வாழ்த்து தெரிவிக்க "மலர் செண்டு'டன் கமிஷனர் அலுவலகத்துக்கு காலையில் வந்திருந்தனர்.

பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று மனோகரனிடம் ரகசிய விசாரணை : கோவையை சேர்ந்த துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கோவை கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மனோகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் மூன்று நாள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதையடுத்து, தனிப்படை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் தனித்தனியாக விசாரிக்க அழைத்து சென்றனர். முக்கிய குற்றவாளி மோகனகிருஷ்ணன் போலீசாரை தாக்கி தப்பிச்செல்ல முயன்ற போது சுட்டு கொல்லப்பட்டான். இதையறிந்த தனிப்படை போலீசார் மனோகரனை, குழந்தைகளை கால்வாயில் தள்ளிய இடத்திற்கு அழைத்து செல்லாமல், பொள்ளாச்சி நகர போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். பொள்ளாச்சி போலீசாரை கூட அனுமதிக்காமல் தனி அறையில் ரகசிய விசாரணை செய்தனர். ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு, அறைக் கதவுகளை தனிப்படை போலீசார் திறந்தனர். அதன்பின், போலீஸ் ஸ்டேஷன் பின்பகுதியில் உள்ள கழிப்பிடத்திற்கு செல்ல அனுமதித்தனர். இந்த விஷயம் வெளியே கசிந்ததும், பொள்ளாச்சியில் இருந்து, கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மனோகரனை போலீசார் அழைத்து சென்றனர்.

என்கவுன்டரில் கொடூரன் பலி  நீதித்துறை விசாரணை  : கோவையில் பள்ளி குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வேன் டிரைவர் மோகனகிருஷ்ணனை போலீசார் விசாரணைக்காக நேற்று அதிகாலை அழைத்து சென்றபோது "என்கவுண்டரில்' சுட்டு கொல்லப்பட்டான். போத்தனூர் போலீஸ் எல்லைக்குள் நடந்த இச்சம்பவம் குறித்து கோவை ஜே.எம்.எண்:7 மாஜிஸ்திரேட் தெய்வம், கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் நேரடி சாட்சியாக சேர்க்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். என்கவுன்டர் மேற்கொண்ட அதிகாரி, உடன் இருந்தவர்கள், மோகனகிருஷ்ணனின் உறவினர்களிடம் விசாரிக்கப்பட்டனர். பிரேதத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்த இடங்கள், பிரேதத்தின் நிலை, துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் ஆகியன குறித்து போலீசாரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டது. விசாரணைக்குப் பின், மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கொலைகாரனின் "12 நாள் வாழ்க்கை!' அக்.,29: காலை 7.50 மணிக்கு பள்ளிக் குழந்தைகள் முஸ்கன்(11), ரித்திக்(8) கால்டாக்சியில் கடத்தல். அன்றிரவே, கொலைகாரன் மோகனகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
அக்.,30: உடுமலை அருகே வாய்காலில் சிறுமி முஸ்கன் உடல் மீட்பு; கொலைகார கூட்டாளி மனோகரனும் கைது.
நவ.,1: பல்லடம் அருகே வாய்காலில் சிறுவன் ரித்திக் உடல் மீட்பு
நவ.,3: கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பாட்டி கமலாபாய், கோவை மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பின்போது கொலையாளிளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடையாளம் காட்டினார்.
நவ.,4: கொலையாளிகள் இருவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஆவேசமடைந்த மக்கள் முட்டை வீசி கோஷமிட்டனர்.
நவ.,8: கொலையாளிகளை போலீசார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் கஸ்டடியில் எடுத்துச் சென்றனர்.
நவ.,9: விசாரணைக்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்ட மோகனகிருஷ்ணன், போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோட முயற்சித்த போது அதிகாலை 5.30 மணிக்கு சுட்டுக்கொல்லப்பட்டான்.


குற்றவாளி மனோகரன் குடும்பம் ஊரை விட்டு காலி செய்ய வேண்டும்

* அங்கலக்குறிச்சி மக்கள் போர்க்கொடி

கோவை பள்ளி குழந்தைகளை இரக்கமின்றி கால்வாயில் தள்ளி கொலை செய்த மனோகரன் செத்தாலும் இந்த மண்ணுக்கு கொண்டு வரக்கூடாது, அவனது குடும்பம் ஊரை விட்டு காலி செய்ய வேண்டுமென்று குற்றவாளிகளின் சொந்த கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கோவையை சேர்ந்த துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் கடந்த 29ம் தேதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக கோவை கால் டாக்சி டிரைவர் மோகன்(33) என்கிற மோகனகிருஷ்ணன், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மனோகரன்(23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்காக போலீஸ் கஸ்டடியில் வெளியில் வந்த மோகன்ராஜ், போலீசாரை தாக்கி தப்பி செல்ல முயன்றபோது "என்கவுண்டரில்' சுட்டு கொல்லப்பட்டான். குழந்தையை நாசம் செய்து கொலை செய்தவனை போலீசார் சுட்டு கொன்றதற்கு நன்றி தெரிவித்தும், இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குற்றவாளிகளின் சொந்த ஊரான அங்கலக்குறிச்சியில் பொதுமக்கள் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.

அங்கலக்குறிச்சியில் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பள்ளியில் அனுமதி பெற்று மாணவர்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினர். கோவை பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பஸ் ஸ்டாப்களில் பேனர் வைத்துள்ளனர்.

கிராம மக்களின் கருத்துகள் :

தனலட்சுமி (ஊராட்சி தலைவர்): அங்கலக்குறிச்சி கிராமம் மாநில அளவில் சிறப்பான கிராமம் என்று பெயர் வாங்கியது. ஆனால், கோவை பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த சம்பவத்தால் கிராமத்திற்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளை இரக்கமின்றி துடிக்கத்துடிக்க கால்வாய் தண்ணீரில் தள்ளி கொலை செய்த குற்றவாளிகள் இருவரும் இரண்டு நாட்கள் அங்கலக்குறிச்சியில் மனோகரன் வீட்டில் தங்கியுள்ளனர். அப்படிப்பட்டவன்களை தங்க வைத்த மனோகரனின் குடும்பத்தார் கிராமத்திலேயே இருக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

அதனால் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றோம். இறுதியாக மனோகரனின் வீட்டிற்கு சென்று ஊரை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். குழந்தைகளை கொன்ற குற்றவாளிகளில் ஒருவனை கடவுள் உடனடியாக தண்டித்து விட்டார். பெண் குழந்தைகளை நாசம் செய்ய ஐடியா கொடுத்த மனோகரனுக்கும் இதே மாதிரி தண்டனை கிடைக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளை பாழ்படுத்த நினைப்பவர்கள் திருந்துவார்கள்.

கண்ணியம்மாள் (பொதுமக்கள்): அங்கலக்குறிச்சியில் உள்ள மனோகரனின் குடும்பம் பூ வியாபாரம் செய்கிறது. பூ விற்க வரும் போது மனோகரன் அவனது அம்மாவுடன் தெருவுக்குள் வருவான். யாரிடமும் வெளிப்படையாக பேசமாட்டான். பள்ளி குழந்தையை கடத்தி பணம் சம்பாதிக்க நினைத்தவர்கள் பெண் குழந்தைகளை நாசப்படுத்தியுள்ளனர். அந்த குழந்தைகளின் குடும்பத்தார் முன்னிலையில் மனோகரனையும் தூக்கில் போட்டு கொல்ல வேண்டும். அப்போதுதான் குழந்தைகளை பெற்றவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும். எந்த விசாரணையும் செய்யாமல் தண்டிக்க வேண்டும்.

திருமூர்த்தி (பொதுமக்கள்): குழந்தைகளை கொலை செய்தவர்களை மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அவர்கள் செய்த பாவத்திற்கு ஒருவனுக்கு கடவுளே தண்டனை கொடுத்து விட்டார். அதே கதிதான் இன்னொருவருக்கும் ஏற்படும். குழந்தை இறந்த தகவலை கேட்டபோது எங்களது மனமே கனத்தது. குழந்தைகளை பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும். அந்த குழந்தைகளை கால்வாய் தண்ணீரில் தள்ளி கொன்ற போது எப்படி துடித்திருப்பார்கள். அதே நிலை மனோகரனுக்கும் ஏற்பட வேண்டும். ஈவு, இரக்கம் இல்லாத அவர்கள் இந்த உலகத்தில் வாழக்கூடாது.

புவனேந்திரன் (பொதுமக்கள்): குழந்தைகளை கொன்ற குற்றவாளி மனோகரனின் குடும்பம் அங்கலக்குறிச்சியில் இனிமேல் வசிக்கக்கூடாது. அதனால் அவர்களை கிராமத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என்று கூறி விட்டோம். அவன் செத்தாலும் இந்த மண்ணுக்கு கொண்டு வர விடமாட்டோம். சட்டப்படி மனோகரனுக்கும் கடவுளே தண்டனை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு, கிராம மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.